சென்னையில் தனியாக நடந்து செல்பவர்கள்தான் இவர்களின் குறி! கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்
சென்னை: தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கத்தி முனையில் வழிப்பறி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் அசோக் நகர், கே.கே. நகர், வடபழனி உட்பட பல இடங்களில் இந்த கும்பல் வழிப்பறி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து அசோக் நகர், கே.கே. நகர், வடபழனி உட்பட சென்னையில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கத்திமுனையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் பொறி வைத்து பிடித்த கொள்ளையர்களின் பெயர் ராமாபுரத்தைச் சேர்ந்த கஜா என்கிற கஜேந்திரன்,20, போரூர் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ்குமார்,20, ராமாபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்த மணி என்கிற மணிகண்டன்,18 என்பதாகும்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் மூன்று பேரும் சேர்ந்து ராமாபுரம், புனித தோமையர் மலை, மாங்காடு, அசோக் நகர், கே.கே.நகர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் செல்போன் பறிப்புச் சம்பவங்களிலும் ஈடுபட்டது தெரியவந்தது.
சென்னை ராமாபுரம், பாரதி சாலை, கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,52. இவர் ராமாபுரம் வள்ளூவர் சாலை மற்றும் கலாஷேத்தம்மன் கோயில் தெரு சந்திப்பில் கடந்த 25ஆம் தேதி தனியாக நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள், ரவிச்சந்திரனை கத்தி முனையில் மிரட்டி அவர் வைத்திருந்த 1,250 ரூபாயை வழிப்பறி செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து ரவிச்சந்திரன், ராமாபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். விசாரணை நடத்திய காவல்துறையினர் இந்த மூன்று கொள்ளையர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 செல்போன்கள், விலை உயர்ந்த பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். காவல்துறை விசாரணைக்குப் பிறகு மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொள்ளையர்கள் சிக்கியது எப்படி என்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த ராமாபுரம் காவல்நிலைய போலீசார், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் மூன்று பேரும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு பைக்கில் சென்னை முழுவதும் சுற்றி செல்போன் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
செல்போன்களை விற்று அந்தப் பணத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். செல்போன்கள் பறிப்பு தொடர்பாக அந்தந்த காவல் நிலையங்களில் புகார்கள் சென்றிருக்கின்றன. ஆனால் இவர்கள் சிக்கவில்லை. தற்போது பணம் பறிப்புச் சம்பவத்தில் சிக்கியவர்களிடம் விசாரித்தபோதுதான் செல்போன் பறிப்புச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் தெரியவந்திருக்கின்றன என்று தெரிவித்தார்.
தனியாக நடந்து செல்பவர்கள்தான் இவர்களின் குறியாக இருந்திருக்கிறது. தற்போது காவல்துறையினர் 3 கொள்ளையர்களை கைது செய்துள்ளதால் சென்னைவாசிகள் சற்றே நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.












Click it and Unblock the Notifications