சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்.. தேர்தல் பணிகளில் ஈடுபடவும் தடை.. தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. புதிய ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பணிகளில் அருண் ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோதக் சென்னையின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். அருண் பாரபட்சமாக செயல்படுவதாக தவெக மற்றும் பாஜக குற்றம் சாட்டியிருந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தும் புகார் அளித்த நிலையில், காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. சட்டசபை தேர்தலையொட்டி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் தலைமை செயலாளர் முருகானந்தத்தை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து புதிய தலைமை செயலாளராக சாய் குமாரை நியமித்தது தேர்தல் ஆணையம். இதேபோன்று பொறுப்பு டி.ஜி.பி.யாக இருந்த வெங்கடராமன் மாற்றப்பட்டு புதிய டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றுள்ளார்.
இதேபோல் மதுரை போலீஸ் கமிஷனர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி என மொத்தம் 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பணி மாறுதல் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தான் சென்னை மாநகர காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த அருண் ஐபிஎஸ் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். இதற்கு பதிலாக தற்போது மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், கூடுதல் காவல்துறை இயக்குநருமான அபின் தினேஷ் மோதக் புதிய சென்னை மாநகர காவல் ஆணையராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் பணிகளில் அருண் ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாஜகவினர் மற்றும் தவெகவினரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் அவர்களை மாற்றக் கோரியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் அடுத்தடுத்து அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications