'மண்ணிலே ஈரமுண்டு'.. நன்றி சொன்ன 90 வயது முதியவர்.. நெகிழ வைத்த சென்னை போலீஸ் கமிஷ்னர் சந்தீப்ராய்
சென்னை: வீட்டு பத்திரத்தை 90 வயது முதியவர் தொலைத்துவிட்டார். இது தொடர்பாக அளித்த புகார் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கவனத்திற்கு வந்தது.அவர் உடனே நடவடிக்கை எடுத்து புதிய பத்திரம் கிடைக்க செய்தார். அவருக்கு அந்த முதியவர் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார்.
வீட்டு பத்திரத்தை தொலைத்துவிட்டால், அதனை பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும். காவல் நிலையத்தில் புகார் அளிப்பது தொடங்கி பத்திர ஆபிஸ்க்கு அலைவது வரை நிறைய காலமும், அலைச்சலும் தேவை.
90வயது முதியவர் இப்படி பத்திரத்தை தொலைத்து அலைந்தால் அவர் எப்படி வாங்குவார் யோசித்து பாருங்கள். இதுதான் சென்னை போலீஸ் கமிஷ்னர் சந்தீப்ராய் கவனத்திற்கு வந்து தற்போது சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது.

என்ன நடந்தது என்பதை கொஞ்சம் தெளிவாக பார்ப்போம்.. சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியை சேர்ந்தவர் 90வயதாகும் ராஜகோபாலன் . இவர் திருவான்மியூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 708 சதுரடியில் வீடு வாங்கி இருந்தார். 90களில் வாங்கிய இந்த வீட்டிற்கான பத்திரப்பதிவு 1995-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி திருவான்மியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்துள்ளது.
இந்த நிலையில் ராஜகோபால் தனது வீட்டின் கிரையப்பத்திரம் காணாமல் போய்விட்டதாக திருவான்மியூர் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த மாதம் 17-ந்தேதி அன்று திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் தொலைந்து போய்விட்டதாக திருவான்மியூர் போலீசிடம் கூறியிருக்கிறார். 90வயதில் பத்திரத்தை தொலைத்துவிட்டு முதியவர் அலைவது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து கமிஷ்னர் சந்தீப்ராய் ரத்தோர், முதியவர் ராஜகோபாலனுக்கு அழைக்கழிப்பு இல்லாமல் பத்திரம் கிடைக்க உரிய ஏற்பாடு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து போலீசார் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் பத்திரம் கிடைக்கவில்லை. இவ்வாறு கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கு போலீசார கண்டறிய முடியா சான்றிதழ் என்று பட்டியலிட்டு தர வேண்டும்.
அப்படி தந்தால் தான் புதிய பத்திரம் பெறுவதற்கு சட்டத்தில் வழி உண்டு. எனவே இந்த விதியை பின்பற்றி முதியவர் ராஜகோபாலனுக்கு புதிய பத்திரம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்தார்கள்.
அதன்படி முதியவர் ராஜகோபாலக்கு புதிய பத்திரம் வழங்கினார்கள். தனக்கு புதிய பத்திரம் வழங்க உதவிய போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் திருவான்மியூர் போலீசாருக்கு ராஜகோபாலன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications