நடுரோட்டில் பஸ்ஸை மறித்து மழை டான்ஸ்.. ‘ரீல்ஸ்’ செய்து வெறுப்பேற்றிய பாய்ஸை தட்டித் தூக்கிய போலீஸ்!
சென்னை : சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழிமறித்து இன்ஸ்டா ரீல்ஸ் செய்த 2 இளைஞர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் இருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை நடு ரோட்டில் மறித்த 2 இளைஞர்கள் டான்ஸ் ஆடி, தங்களது நண்பனின் உதவியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர போலீசாருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் இருவரின் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இளைஞர்கள், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரீல்ஸ் கலாச்சாரம்
சமீபகாலமாகவே 'ரீல்ஸ்' எனப்படும் ஷார்ட் வீடியோ கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள், இளம்பெண்கள், சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கவனம் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பள்ளி மாணவ மாணவியரும் இன்ஸ்டாகிராம், யூடியூப் ஷார்ட்ஸ், பேஸ்புக் ரீல்ஸ், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ஆகியவற்றில் வித்தியாசமாக ஏதாவது செய்து பதிவிட்டு வருகின்றனர். இவர்களுக்கிடையே பல ஆர்வக்கோளாறு நபர்கள் ஏடாகூடமான செயல்களில் ஈடுபட்டு அவ்வப்போது சிக்கியும் வருகின்றனர்.

ஏடாகூட செயல்கள்
இளைஞர்கள் மத்தியில், அதிவேகமாக பைக் ஸ்டண்ட் செய்வது, கத்தி போன்ற ஆயுதங்களக் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த வீடியோக்கள் பரவி, காவல்துறையின் கவனத்திற்குச் சென்று, அவர்களால் எச்சரிக்கப்படும் சம்பவங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், இரு இளைஞர்கள் சென்னை மாநகர காவல்துறையிடம் தற்போது சிக்கியுள்ளனர்.

பேருந்தை மறித்து ரீல்ஸ்
இரண்டு இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதற்காக சென்னையில் இருந்து பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழிமறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து, டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்துள்ளனர். இந்த வீடியோ பரவிவரும் நிலையில், இந்த வீடியோவை பார்த்த நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை பகிர்ந்து சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தை டேக் செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோரினார்.

தட்டி வைக்கணும்
"இப்படி பண்றது எல்லாம் விளையாட்டா நெனச்சு விட்டா ஒருநாள் பெரிய விபரீதமா முடியும். சென்னை போலீசாருக்கு மழைக் காலத்தில் எவ்வளவோ வேலை இருக்கும், இதுல இவங்களையும் தட்டி வெச்சு அவங்க வாயால மன்னிப்பு கேட்கும் காணொளி ஒண்ணு போட்டு விடுங்க, அத பார்த்தாவது மத்தவங்களுக்கு புத்தி வரட்டும்" என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

தூக்கிய போலீஸ்
இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தங்களுடைய தகவலுக்கு நன்றி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசுப் பேருந்தை நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தி ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட அந்த இரு இளைஞர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, இருவரையும் அழைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இனிமேல் இவ்வாறு செயல்படக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். இந்த தகவலையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications