கள்ளக்காதலியின் மகளையும் விடலை! சீண்டிய சென்னை சப்-இன்ஸ்பெக்டர்.. போக்சோவில் தூக்கிய போலீஸ்
சென்னை: தனது கள்ளக்காதலியின் மகளுக்கு கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த சென்னையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளே இந்தக் கொடுமையால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
வெளியில் மட்டுமல்லாமல் வீட்டிற்குள்ளேயும் பல சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர். உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஏன் பெற்ற தந்தையே கூட மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடந்து வருகின்றன.

சப் இன்ஸ்பெக்டர்
இதைவிட பெரிய துரதிருஷ்டம் என்னவென்றால், இதுபோன்ற சம்பவங்களை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டிய போலீஸாரே இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாவது தான். அப்படியொரு சம்பவம்தான் சென்னையில் அரங்கேறி இருக்கிறது. சென்னை மாநகரக் காவல்துறையில் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாண்டியராஜ் (50). இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகளுடன் ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை
இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் பாண்டியராஜ் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவரை பிரிந்து வாழும் அந்தப் பெண்ணுக்கு அப்போது பள்ளியில் படிக்கும் ஒரு மகள் இருந்திருக்கிறார். இதனிடையே, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்தே, அதாவது அந்த மாணவிக்கு 13 வயது இருக்கும் போதே அவருக்கு பாண்டியராஜ் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. நாளுக்கு நாள் தொல்லை அதிகம் ஆகி உள்ளது.

மிரட்டல்
ஒருகட்டத்தில், அவரை பாலியல் வன்கொடுமைக்கும் அவர் ஆளாக்கியுள்ளார். இந்நிலையில், தற்போது கல்லூரிக்கு செல்லும் அப்பெண்ணுக்கு மீண்டும் பாலியல் ரீதீயாக பாண்டியராஜ் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால், அவரை பாலியல் வன்கொடுமை செய்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாகவும் அவர் மிரட்டி வந்துள்ளார். இதனால் அவரும் அமைதியாக இருந்துள்ளார்.

புகார் - கைது
இதன் தொடர்ச்சியாக, அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அப்பெண்ணை பல வருடங்களாக பாண்டியராஜ் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications