ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க புது ஐடியா.. பக்கா பிளான் போடும் சென்னை போலீஸ்! எழுதிக் கொடுத்த 454 பேர்
சென்னை: சென்னையில், குற்ற சம்பங்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். தொழில்புரிய மற்றும் பொருள் ஈட்டுவதற்காக பலர் கிராமங்களில் இருந்து நகரான சென்னைக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் தற்போது சென்னையில் ஒருபுறம் போதைமாத்திரைகள் உள்ளிட்ட போதப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதாலும், மறுபுறம் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாலும் சென்னை மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

போதைப்பொருட்கள் புழக்கம்
தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக தலைநகரான சென்னையில் இதன் நிலைமை மிகவும் மோசம். தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க சென்னை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கம் போதைப்பொருட்கள் புழக்கமும் குறைந்தபாடில்லை. பல பெட்டிக்கடைகளில் சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தி குட்கா உள்ளிட்ட பாக்குகளை வாங்கி பயன்படுத்துவதை மிகவும் சாதாரணமாக பார்க்க முடிகிறது.

ரவுடிகளின் அட்டகாசம்
அதேபோல், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை சீர்கெட்டுள்ளது. வாட்ஸ் அப் குழுக்கள் வைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் ரவுடிகளின் அட்டகாசமோ மேலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் போதை ஏற்றிக்க்கொண்டு சுற்றும் ரவுடிகள் கடைகளில் மாமூல் வசூலிப்பது, திருட்டு வேலைகளில் ஈடுபடுவது, கத்தி அரிவாள்களுடன் போலீஸ்காரர்களையே மிரட்டுதல் போன்ற பல்வேறு நாச வேலைகளில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் மேலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு நடவடிக்கை
அதேபோல், தலைநகர் சென்னையின் ரவுடிகளின் அட்டகாசமும் அதிகரித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மாமூல் கேட்டு வியாபாரிகளை தொந்தரவு செய்வது, பொதுமக்களிடம் பணம் கேட்பது, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது என ரவுடிகளின் அட்டகாசம் அதிகரிப்பதால் இதற்கும் கடிவாளம் போட சிறப்பு நடவடிக்கையை சென்னை மாநகர காவல்துறை தொடங்கியுள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கியுள்ளார். சென்னையை குற்றம் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியாக, தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி கொண்ட நபர்களுக்கு எதிராக சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குண்டர் சட்டம் பாயும்
இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக, 'திருந்தி விட்டேன் இனி குற்ற செயல்களை செய்ய மாட்டேன்' என பிரமாணப்பத்திரம் எழுதிக்கொடுத்த 454 குற்ற பின்னணி கொண்ட நபர்களை கண்காணித்த போலீசார், எழுதிக் கொடுத்தது போல நடந்து கொள்கிறார்களா? என கண்காணித்தும் வருகின்றனர். மேலும், இனி குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சென்னை காவல்துறையின் இந்த சிறப்பு நடவடிக்கை குறித்து மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், "சென்னை மாநகர காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குற்ற சம்பங்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் தயங்கமாட்டோம்" என்றார்.












Click it and Unblock the Notifications