சென்னைவாசிகளே.. ரயில்வே ஸ்டேஷன் போறீங்களா.. பர்ஸில் இனி வெயிட்டா காசு எடுத்துட்டு போங்க!
சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், உள்ளிட்ட ஆறு ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் மூலம் தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து இடங்களுக்கும் மக்கள் ரயில்களில் செல்கிறார்கள். மிகவும் முக்கியமான இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வந்து செல்வார்கள். இதனால் இந்த ரயில் நிலையங்கள் எப்போதுமே கூட்டமாக காணப்படும்.
அதுமட்டுமின்றி சென்னைக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் வழியாகத்தான் வருவார்கள் என்பதால் அவர்களை அழைத்து வரவும், அவர்களை அனுப்பி வைக்கவும் பலர் வருகிறார்கள். அப்படி வருபவர்கள் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க வேண்டும். இப்படி வருபவர்களுக்கு பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

பிளாட்பார்ம் டிக்கெட்
இந்நிலையில் கொரோனா காலத்தில் குறைந்தபட்ச தூரம் செல்லும் இடங்களுக்கு ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. தற்போது சென்னை சென்ட்ரல் மற்றும எழும்பூர் ரயில்நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் ரூ.10ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில்வே விளக்கம்
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் பயணிகளிடமிருந்து வரும் தொடர் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், குறிப்பாக முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை வழங்க அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச மாதம் முதல் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது.

எங்கு உயர்வு
இந்நிலையில் தற்போது சென்னை ரயில்வே கோட்டம் நேற்று முதல் 6 முக்கிய நிலையங்களான சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய ஆறு ரயில் நிலையங்களில் மட்டும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை வழங்க அனுமதி அளித்துள்ளது. பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை ஒரு பயணிக்கு ரூ.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜுன் 15 வரை
பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டது என்பது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும். ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையின் மூலம் மற்றவர் உதவியை நாடும் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இது நன்மை அளிப்பதாக அமையும். இந்த உயர்த்தப்பட்ட விலையானது ஜூன் 15ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications