தொழிலில் நஷ்டம்.. 6 ஏடிஎம்களை உடைத்த ரியல் எஸ்டேட் அதிபர்.. கடைசியில் என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: சென்னை அருகே திருநின்றவூரில் இடைத்தரகர் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் 6 ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர், பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சேஷாத்திரி (49). இவர் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஏடிஎம்மில் கொள்ளை
இந்த நிலையில் இரவு மதுபோதையில் ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக கையில் சுத்தியுடன் திருநின்றவூர் பிரகாஷ் நகர் முதல் திருநின்றவூர் வரை சிடிஎச் சாலையில் உள்ள எஸ்பிஐ, கனரா, ஆக்சிஸ் உள்ளிட்ட 6 ஏடிஎம் எந்திரங்களை உடைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை.

காவல் நிலையத்தில் சரண்
இதையடுத்து கையில் இருந்த சுத்தியுடன் திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் திட்டமிட்டு இப்படி செய்தாரா, இல்லை தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட விரக்தியாலும் மன உளைச்சலாலும் இப்படி செய்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்தடுத்த முயற்சி
பணம் திருட்டு, நகை திருட்டு ஆகியவற்றை செய்தால் சில காலங்களுக்கு மட்டுமே சொகுசாக வசிக்கலாம் என்பதால் திருடர்கள் அகல கால் வைத்து வருகிறார்கள். இதனால் நீண்ட காலத்திற்கு சொகுசாக வாழ ஆசைப்பட்டு வங்கியையோ அல்லது ஏடிஎம் மையத்தையோ அல்லது நகை அடகு கடை, நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள்.

நஷ்டம்
அப்படியிருக்கும் போது ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக ஏடிஎம் மையங்களை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கொள்ளையடிக்க முயன்றவர் அது முடியாத நிலையில் எதற்காக காவல்நிலையத்தில் சரணடைய வேண்டும் என்பது குறித்து போலீஸார் சந்தேகித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications