அடேங்கப்பா.. சென்னையில் 5 நாட்களில் இயல்பை விட 491% அதிகம் பெய்த மழை!
சென்னை: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், கடந்த 5 நாட்களில் சென்னையில் இயல்பை விட 491 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது என்று கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 24 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுருளக்கோட்டில், அதிகபட்சமாக 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அதிக மழை
7ம் தேதி முதல் இன்று வரை இயல்பைவிட அதிக மழை அளவு பதிவாகியுள்ளது. 7ம் தேதி முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒருவார மழை அளவில் இயல்பான சராசரி மழை அளவு 4 செ.மீ. ஆனால் பெய்தது 10% இது வழக்கத்தை விட 142% அதிகம். சென்னையில் இந்த காலக்கட்டத்தில் எதிர்ப்பார்க்கப்பட்ட சராசரி மழை அளவு 8 செ.மீ. ஆனால் பெய்தது, 46 செ.மீ. இது 491% அதிகம். அதாவது 5 நாட்களில் இவ்வளவு அதிகமாக மழை பெய்துள்ளது.

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி
புதிதாக அந்தமான் அருகே நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கில் தமிழ்நாட்டின் கரைநோக்கி நகரக்கூடும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக்கூடும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் நாளை மறுதினம் முதல் மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எங்கே போகிறது
இதனிடையே, சென்னைக்கு அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னையில் மழை
சென்னை நகரைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்றும் நாளையும் கேரளக் கடற்கரைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications