பெங்களூர் பந்த்.. சென்னை- பெங்களூர் செல்லும் தமிழக பேருந்து இயக்கம் இன்று இரவு முதல் நிறுத்தம்
சென்னை: சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் இன்று இரவு 8 மணி முதல் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடகா அரசுக்கு கடந்த 18-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை ஏற்க கர்நாடகா மறுத்துவிட்டது.
இந்த நிலையில் மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் தமிழகம்- கர்நாடகா இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காவிரி பிரச்சினை தொடர்பாக நாளை பெங்களூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த பந்த் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவடையும். இந்த நிலையில் தமிழர்களின் உடைமைகள் பாதிக்கப்படும் என்பதால் பெங்களூர் செல்லும் தமிழக லாரிகளை எல்லையிலேயே நிறுத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் இன்று இரவு 8 மணி முதல் எல்லையிலேயே நிறுத்தப்படும் என தெரிகிறது. நாளை மாலை 6 மணிக்கு மேல் சூழலுக்கேற்ப மீண்டும் பேருந்துகள் இயக்கம் குறித்து முடிவு செய்யப்படும்.












Click it and Unblock the Notifications