இனி வியர்க்க விறுவிறுக்க பயணம் இல்லை! சென்னையை குளிர்விக்க வருது ஏசி புறநகர் ரயில்! வெளியான அப்டேட்!
சென்னை: சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயிலை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் இயக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஏசி புறநகர் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில் சேவையை பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குறைந்த செலவில் வேகமாக சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக வேலை, கல்லூரிக்கு செல்லும் மக்கள் மின்சார ரயில்களால் அதிகம் பயனடைந்து வருகின்றனர். 5 ரூபாய் கட்டணத்தில் சென்னையில் 55 மின்சார ரயில்களின் சேவைகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புறநகர் ரயில்கள்:
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் வழித் தடத்திலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே ஏசி வசதி இல்லாத ரயில் பெட்டிகள் ஆகும். இந்த நிலையில் சென்னை மக்களின் வசதிக்கேற்ப ஏசி வசதியுடன் கூடிய மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சென்னை ஐசிஎஃப்:
இதை அடுத்து சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புறநகர் ஏசி மின்சார ரயில் தயாரிக்கப்பட்டு வந்தது. ஐசிஎஃப் என அழைக்கப்படும் இந்த ரயில் பெட்டி தொழிற்சாலை உலகின் அதிக ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக இருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 3,000-க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஏசி புறநகர் ரயில் பெட்டிகள்:
குறிப்பாக வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர், எல்எச்டி ரயில் பெட்டிகள், தேஜஸ் ரயில், அம்ரித் பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில் பெட்டிகள் இங்கு தயாராவது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிருந்து பல ரயில் பெட்டிகள் இந்தியா முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அங்கு ஏசி மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னைக்கு ஒதுக்கீடு:
மும்பை புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்கள் ஏசி வசதியுடன் இயக்குவதற்காக ஐ.சி.எஃபு.க்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கோட்டத்திற்கும் ஒரு ரயில் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த பணிகள் மூலமாக நிறைவடைந்துள்ள நிலையில் சோதனை ஓட்டமானது நடைபெற்றுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது.
🚨Chennai’s first 12 car AC suburban rail! 🚊
— Chennai Updates (@UpdatesChennai) January 17, 2025
pic.twitter.com/js2mUx5AxN
விரைவில் மக்கள் பயன்பாடு:
வெள்ளை நீல வண்ணத்தில் பார்ப்பதற்கு வந்தே பாரத் ரயில்கள் போலவே இந்த ஏசி ரயில் பெட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இருக்கை மற்றும் ஸ்டாண்டிங் வசதியுடன் இந்த ரயிலை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முழுமையாக ஏசி வசதி கொண்ட இந்த ரயில்கள் தற்போது பரிசோதனை முயற்சியாக இயக்கப்பட்டு வரும் நிலையில் தெற்கு ரயில்வே சான்றிதழ் அளித்தவுடன் இந்த ரயில் பெட்டிகள் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரும் என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள். இதனால் இந்த ஏசி புறநகர் ரயில் பெட்டிகள் விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications