சென்னையில் 200 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை! ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: சென்னையில் 200 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களையும் அவர் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் டிசம்பர் 6-ஆம் தேதி முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை தூய்மைதான். எந்த பேரிடரை எதிர்கொண்டாலும் அதில் இருந்து இந்த மாநிலம் மீண்டு வருவதில் உங்கள் (தூய்மை பணியாளர்கள்) பணிதான் இருக்கிறது.
உங்களின் ஒப்பற்ற உழைப்பால்தான் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கிறது. நான் சென்னை மாநகர மேயராக இருந்த போது கலைஞர் இது பதவி அல்ல, பொறுப்பு என சொன்னார். அது போல் நான் உங்களுக்கு சொல்கிறேன்.
நீங்கள் செய்வது வேலை அல்ல சேவை. ஊரே அடங்கிய பிறகு ஓய்வின்றி உழைப்பவர்கள் தூய்மை பணியாளர்கள்தான். இந்த மாநகரமே உங்களின் சேவையை பார்த்து நன்று உணர்வுடன் வணங்குகிறது. ஒட்டுமொத்த சென்னை சார்பாக உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்காக 200 வார்டிலும் கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் திமுக அரசு படிப்படியாக செய்யும் என கூறினார்.












Click it and Unblock the Notifications