கொளுத்துது கோடை வெயில்..சென்னையன்ஸ்க்கு குளுகுளு அறிவிப்பு! வரப் போகுது 2வது ஏசி மின்சார ரயில்!
சென்னை: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புறநகர் ரயில் பயணிகளை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே முக்கிய முடிவெடுத்துள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவில் இரண்டாவது ஏ.சி. மின்சார ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடை வெப்பம் உச்சத்தை எட்டியுள்ள இந்த நேரத்தில், இந்த அறிவிப்பு தினமும் ரயிலில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில் சேவையை பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குறைந்த செலவில் வேகமாக சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக வேலை, கல்லூரிக்கு செல்லும் மக்கள் மின்சார ரயில்களால் அதிகம் பயனடைந்து வருகின்றனர். 5 ரூபாய் கட்டணத்தில் சென்னையில் 55 மின்சார ரயில்களின் சேவைகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஏசி ரயில் சேவை
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் வழித் தடத்திலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே ஏசி வசதி இல்லாத ரயில் பெட்டிகள் ஆகும். இந்த நிலையில் சென்னை மக்களின் வசதிக்கேற்ப ஏசி வசதியுடன் கூடிய மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
புறநகர் ஏசி மின்சார ரயில்
இதை அடுத்து சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புறநகர் ஏசி மின்சார ரயில் தயாரிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சோதனை உள்ளிட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் சென்னையில் முதன் முறையாக ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது. 12 பெட்டிகள் கொண்ட ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1116 பேரும் நின்று கொண்டு 3798 பேர் என மொத்தம் 4914 பேர் பயணிக்க முடியும்.
மிகுந்த வரவேற்பு
இந்த நிலையில், தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரே ஒரு ஏ.சி. மின்சார ரயிலுக்கே பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. காலை மற்றும் மாலை உச்சநேரங்களில் இந்த ரயிலில் கூட இடம் கிடைப்பது கடினமாகும் அளவுக்கு கூட்டம் அதிகமாக இருப்பதாக பயணிகள் கூறி வருகின்றனர். மெட்ரோ ரயிலுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில், குளிர்சாதன வசதியுடன் சுலபமாக பயணம் செய்ய முடிவதால், மேலும் ஏ.சி. ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இரண்டாவது ஏ.சி. ரயில்
இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு தற்போது இரண்டாவது ஏ.சி. ரயிலை இயக்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. புதியதாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஏ.சி. மின்சார ரயிலில் பல நவீன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் இயக்கத்தின் போது கதவுகள் தானாக மூடப்படுவதால் பாதுகாப்பு அதிகரிக்கும் என்பதுடன், ஏ.சி. குளிர்ச்சியும் வெளியேறாமல் இருக்கும்.
சிசிடிவி கேமராக்கள்
அதேபோல் அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், குறிப்பாக பெண்கள் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய உதவும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அடுத்தடுத்த ரயில் நிலையங்களை அறிவிக்கும் ஜிபிஎஸ் வசதி கொண்ட எல்.இ.டி. தகவல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த புதிய ரயிலுக்கான தொழில்நுட்ப சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ஏ.சி. மின்சார ரயில்
குறிப்பாக ஆவடி மற்றும் தாம்பரம் பணிமனைகளில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த சோதனைகள் இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தேவையான பாதுகாப்பு அனுமதிகள் கிடைத்தவுடன், மே மாத தொடக்கத்தில் இந்த இரண்டாவது ஏ.சி. மின்சார ரயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.














Click it and Unblock the Notifications