Vadapalani SkyWalk: சென்னை வடபழனியில் ஸ்கைவாக் எப்போது? ஆகாய நடைமேம்பாலத்தால் என்னென்ன நன்மைகள்?
சென்னை: சென்னை வடபழனியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஆகாய நடைமேம்பாலம் (Skywalk) கட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது. ரூ. 12 கோடி செலவில் அமையவிருக்கும் இந்த ஸ்கைவாக்கால் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கலாம்.
சென்னையில் முதல் கட்டமாக 54 கி.மீ. தொலைவிற்கு இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையிலும் என இரு வழித்தடங்களில் தற்போது ரயில்கள் இயங்கி வருகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3ஆவது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4ஆவது வழித்தடம் 26.1 கி.மீ. தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5ஆவது வழித்தடம் 47 கி.மீ. தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த வழித்தடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதை, மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. இதில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் அமைகிறது. இந்தப் பணிகள் 2028 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4ஆவது வழித்தடத்தில், முற்கட்டமாக பூந்தமல்லி - போரூர் வரையிலும், அதைத் தொடர்ந்து போரூர் - வடபழனி - கோடம்பாக்கம் வரையிலும் மெட்ரோ ரயில் பாதையை அடுத்த ஆண்டு இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரு பிரிவுகளையும் இணைக்கும் மையப் பகுதியாக வடபழனி உள்ளது. இங்கு 54 கி.மீ. தூர முதல் கட்ட வழித்தடமும், 118.9 கி.மீ. தூர இரண்டாம் கட்ட வழித்தடமும் இணைகின்றன. இந்த இரு வழித்தடங்களையும் எளிதாக இணைக்கவே ஒரு ஆகாய நடைபாதை எனப்படும் ஸ்கைவாக் தேவைப்படுகிறது.
இந்த நடைபாதை, முதல் கட்ட மெட்ரோ ரயில் நிலையத்தின் டிக்கெட் வழங்கும் தளத்தில் இருந்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையத்தின் டிக்கெட் வழங்கும் தளத்திற்கு நேரடியாகச் செல்லும் வகையில் அமைக்கப்படும். இதன் மூலம் பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்திற்கு மாற முடியும்.
இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்த கட்டுமானத்தை முடிக்க 6 மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. ரூ. 12 கோடி செலவில் இந்த ஆகாய நடைபாதை கட்டப்படும். இதன் நீளம் 130 மீட்டர், அகலம் 6 மீட்டர். இது ஒரு மூடிய நடைபாதை (closed footpath) ஆகும்.
வடபழனி 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் நிலையம் அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளதால், ஆகாய நடைபாதைக்கான பணியை இப்போதே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடைபாதை கட்டப்படுவதால் மெட்ரோ ரயில் பயணிகள் மிகவும் பயனடைவார்கள்.
பூந்தமல்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரலுக்குச் செல்லும் பயணிகள், வடபழனியில் எளிதாக ரயில்களை மாற்றிக் கொள்ளலாம். இதைவிட்டுவிட்டு சாலை மார்க்கமாக வந்து வேறு வழித்தடத்திற்கு மாறுவது சிரமமாக இருக்கும்.
இந்த ஆகாய நடைமேம்பாலம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சொந்தமான திறந்தவெளி நிலத்தில் கழிவுநீர் இணைப்புப் பணியை முடிக்கவும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீதிபதி எம்.தண்டபாணி, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இந்த வேலையை மே 2026-க்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார். எனவே, விரைவில் ஸ்கைவாக் அமைக்கும் பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications