வரதட்சணை கொடுமை... 2வயது பிள்ளையை தவிக்க விட்டு தீக்கு இரையான இளம்பெண்!
Recommended Video
சென்னை : மாமியார் வரதட்சணை கொடுமை செய்ததால் 2 வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர்கள் நந்த குமார். 3 ஆண்டுகளுக்கு முன்பு பீட்சா கடையில் வேலைபார்த்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். சீர்காழியை சேர்ந்த அருள்பிரியா காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால் அவரது பெற்றோர் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு நந்தகுமார் சரிவர வேலைக்கு போகாததால் அருள்பிரியா குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நகை எதுவும் போடாமல் வந்துவிட்டதாகவும் குழந்தைக்கும் அருள்பிரியா வீட்டார் எந்த நகையும் போடவில்லை என்று நந்தகுமாரின் தாயார் கொடுமை படுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அருள்பிரியா உடலில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருள்பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கே.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அருள்பிரியா உயிரிழந்தார்.
இதனையடுத்து மாமியார் கொடுமையால் தான் மகள் அருள் பிரியா தற்கொலை செய்து கொண்டதாக பெண்வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர். நீலாங்கரை போலீசார் சந்தேகத்திற்குரிய மரணமாக வழக்கு பதிவு செய்து நந்தகுமாரிடம் விசாரித்து வருகின்றனர்.
திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. உயிரிழந்த அருள்பிரியாவிற்கு 2 வயது அழகான குழந்தை உள்ளது. வரதட்சணை கொடுமையால் அநியாயமாக இளம்பெண் தீக்கு இரையான நிலையில் உலகமறியா 2 வயது குழந்தை தாயை இழந்து தவித்து நிற்கிறது.