சென்னையின் பல நாள் கனவு நிறைவேறுது.. பெருங்களத்தூரில் இன்னும் 10 நாளில் நடக்க போகும் அதிசயம்
சென்னை: சென்னையில் ஊரை விட்டு வெளியேறி சொந்த ஊர் செல்வோரை கிண்டல் செய்ய, பெருங்களத்தூரை தாண்டி போயிடுவியா ஒரு எட்டு என்று கிண்டல் செய்யும் நிலை நீண்ட காலமாக உள்ளது. ஆம் சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள பெருங்களத்தூர் சந்திப்பு மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி... அங்கு 10 நாளில் எல்லாமே மாறப்போகிறது.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என தென்மாவட்டங்கள் சென்றாலும் சரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் பக்கம் சென்றாலும், வெளியே போக வேண்டும் என்றால் பெருங்களத்தூரை தாண்டாமல் போக முடியாது. இத்தனைக்கும் பெருங்களத்தூர் என்பது ஒரே ஒரு சிக்னல் மட்டுமே உள்ள இடமாகும். தீபாவளி, பொங்கல் உள்பட பண்டிகை நாட்கள் வந்தால், பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசலை கண்டு பீதியடையாதவர்களே இல்லை.. சென்னையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பெருங்களத்தூர் டிராபிக் அந்த அளவிற்கு தெரியும்.

ஆனால் கிளாம்பாக்கம் திறக்காத வரை தான் எல்லாமே, சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்தூர் முன்பு போல் இப்போது டிராபிகில் சிக்குவது இல்லை. காரணம்... சென்னை கோயம்பேட்டில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள், அவுட்டர் ரிங்ரோடு வழியாக நேரடியாக கிளாம்பாக்கம் போய் விடுகின்றன. இதேபோல் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படுகின்றன. இதனால் பெருங்களத்தூர் என்ற பஸ் டாப்பே இப்போது டவுன் பஸ் ஸ்டாப் போல் மாறிவிட்டது.
அதேநேரம் வழக்கமான வாகனங்கள் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துள்ளது. கிளாம்பாக்கம் வரை காரில் சென்று உறவினர்களை வழியனுப்புவது அதிகமாக உள்ளது. இதனால் வாகன நெரிசல் குறையவில்லை.. அதேநேரம் பெருங்களத்தூர் மக்களும் மேம்பால பணிகள் முடிவடையாத காரணத்தால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்,
பெருங்களத்தூர் ரயில் நிலையம் கிராஸிங் பகுதியில் மேம்பாலங்கள் இல்லை. அதனால் உள்ளூர் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலையும் இருந்தது இதனால் அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
பாலங்கள் எப்படி: பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராஸிங் மேம்பாலமும், பெருங்களத்தூரில் இருந்து காமராஜர் சாலை மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதேபோல், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலமும் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதில் நிலம் கையகப்படுத்தும் பணிகளால் மேம்பாலம் கட்டும் பணிகளுக்கு தொய்வு ஏற்பட்டது. எனினும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பாலப் பணிகள் விரைவாக கட்டப்பட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறந்தும் வைக்கப்பட்டது. அதேபோல் பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசா நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலம் பணிகள் தொடங்குவதற்கு காலதாமதம் ஆனது. பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தி பாலம் கட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், பெருங்களத்தூரில் இருந்து காமராஜர் சாலை வழியாகச் செல்லும் மேம்பாலம் பணிகள் 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது.
நான்கு ஆண்டு காலமாகியும் பணிகள் முடியாத நிலை இருக்கிறது. வனத்துறையிடம் அனுமதி கேட்டு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் காத்திருந்தது, காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் மின்வாரிய அலுவலகத்தை மாற்ற காத்திருந்தது போன்ற காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது. தற்போது மின்வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்ய 12 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது விரைவில் அவர்கள் மாற்று இடத்தில் மின்வாரிய அலுவலகத்தை மாற்ற உள்ளார்கள். அதன் பின்னர் சாலைப் பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறும் போது, "தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவுக்கு வந்துவிடும்.
மேம்பாலத்தின் மீது தார் சாலைகள் போடும் பணியும், மேம்பாலத்தின் இருபுறமும் உயர் மின்விளக்குகள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மேம்பாலத்தின் சுற்றுச்சுவரில் வண்ணங்கள் அடிக்கும் பணிகளும் நிறைவடைந்துவிட்டது. எனவே இன்னும் 10 நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பெருங்களத்தூர் பகுதியில் நெடுங்காலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு ஏற்படும் என்று அந்த கூறினார்.












Click it and Unblock the Notifications