"இது ஆன்மிக பூமி.." பிரதமர் மோடியை வரவேற்க சென்னையில் பாஜகவால் நிறுவப்பட்ட பிரமாண்ட சாமி சிலைகள்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க இன்று மாலை சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பாஜக சார்பில் பிரமாண்டமான சாமி சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் முதல் முறையாக இந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியானது தமிழ்நாட்டின் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இன்று துவங்கும் இந்த போட்டியானது ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 180 நாடுகளை சேர்ந்த வீரர்கள் மாமல்லபுரத்துக்கு வருகை புரிந்துள்ளனர். இந்த போட்டிக்கான துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி வருகை
சென்னை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகத்துக்கு வருகிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மதியம் 2.20 மணிக்கு விமானத்தில் சென்னை வருகிறார் மாலை 4.45க்கு சென்னை வரும் அவர் சிறிது நேரம் அங்குள்ள ஓய்வறையில் ஓய்வெடுக்கிறார். அதன் பின்னர் மாலை 5.25 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு 5.45 மணிக்கு அவர் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வருகிறார்.

ஒரே மேடையில் பிரதமர்-முதல்வர்
ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக 5.50 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடைகிறார். அங்கு மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 7.30 மணிக்கு நிகழ்ச்சி முடிந்த உடன், அவர் அங்கிருந்து நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு சுமார் 7.50 மணியளவில் சென்று ஓய்வெடுத்து நாளை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.

பாஜக சார்பில் வரவேற்பு ஏற்பாடு
பிரதமர் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் உள்ளனர்.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பாஜக சார்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பிரதமர் மோடி பயணிக்க உள்ள நேப்பியர் பாலம், சிவானந்தா சாலையின் இருபுறமும் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாஜகவின் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

பிரமாண்ட சாமி சிலைகள்
பாஜகவின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் சிவானந்தா சாலையின் ஓரத்தில் மேடை அமைக்கப்பட்டு பிரமாண்டமாக சாமி சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அய்யனார், கருப்பன், சிவன், துர்க்கை அம்மன் உள்ளிட்ட 6 கடவுளின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி வரும் வேளையில் இந்த சாலையில் பாஜகவினர் திரண்டு அவருக்கு வரவேற்பு வழங்க உள்ளனர்.

பிரதமர் மோடி புறக்கணிப்பு என குற்றச்சாட்டு
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விழிப்புணர்வு பேனர் உள்ளிட்டவற்றில் வைக்கவில்லை என பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை செஸ் ஒலிம்பியாட் பேனரில் பாஜகவினர் ஒட்டிய நிலையில் அதன் மீது திராவிடர் கழகத்தினர் கருப்பு ஸ்பிரே அடித்தனர். இது பெரும் சர்ச்சையான நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு பிரதமர் நரேந்திர மோடியின் படம் புறக்கணிப்பு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications