காஷ்மீர் தாக்குதல்.. பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம்- முதல்வர்
Recommended Video

சென்னை:காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கு சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து அவந்திபோரா நெடுஞ்சாலையில் சென்ற போது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணமடைந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 20 லட்சம் ரூபாய் நிதி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்படையினர் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். இச்சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
உயிரிழந்த பாதுகாப்பு படைவீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன், அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த மன வேதனை அளித்தது.
இந்த தாக்குதலில் உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். துயர சம்பவத்தில் உயிரிழந்துள்ள சுப்ரமணியன், சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிடுகிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது .












Click it and Unblock the Notifications