ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது.. டெல்லி விவகாரம் பற்றி ஆலோசிக்க வாய்ப்பு
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில், மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி, ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக திமுக மூத்த எம்பிக்கள் முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

திமுக எம்பிக்கள் கூட்டம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணியளவில் இந்தக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்றுள்ளார். லோக்சபா மற்றும் ராஜ்யசபா திமுக எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.
என்ன ஆலோசிக்கப்படும்?
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கும் மேல் இருப்பதால், இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் எது குறித்து ஆலோசிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு திமுக வட்டாரத்தில் மட்டும் இன்றி, தமிழக அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது.
மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதிகள், ஜிஎஸ்டி விவகாரம் குறித்து இன்று நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணியை நாடு முழுவதும் அமல்படுத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி
தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில்தான் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
திமுகவிற்கு லோக்சபாவில் 22 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 06 எம்.பி.க்களும் உள்ளனர். முன்னதாக இன்று நடைபெறும் கூட்டத்திற்கு திமுக எம்.பி.க்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார்.
துரைமுருகன் அறிவிப்பு
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டிருந்த அறிக்கையில், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 23ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும். இதில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications