"திமுக தமிழுக்கு என்ன செய்யவில்லை" ஜேபி நட்டாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழுக்கு திமுக என்ன செய்தது என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மைக் காலமாக திமுக அரசு மீது அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் வைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அந்த பொதுக்கூட்டத்தில் ஜேபி நட்டா பேசுகையில், திமுக என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப் பஞ்சாயத்து என்று விமர்சித்தார். அதேபோல் மாநில உரிமைப் பற்றி பேசும் திமுக, இதுவரை தமிழ் மொழிக்காக என்ன செய்துள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
எதே.. கட்டாத மதுரை எய்ம்ஸில் “ஆபரேசனா”? மீம் கிரியேட்டர்போல் ப.சிதம்பரம் கலாய் - நட்டா பற்ற வைத்த தீ
முதல்வர் ஸ்டாலின் பதிலடி
பாஜக தேசிய தலைவர் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். சென்னையில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் தமிழ் பரப்புரைக் கழகம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழ் பரப்புரைக் கழகம்
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ் என்பது வெறும் மொழியல்ல. அது நம் உயிருக்கு நிகரானது. அத்தகைய தமிழை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கக்கூடிய தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கி வைப்பதை பெருமையாகக் கருதுகிறேன். தமிழின் சொத்துகள் பல நூறுஆண்டுகளாக சேகரித்து வைக்கப்படாமல் அழிந்து போய்விட்டது.
டிஜிட்டல் வடிவில் தமிழ்
அந்த தவறு தடுக்கப்பட்டு நமது அறிவுச் சொத்துகள் அனைத்தையும் முழுமையாக டிஜிட்டல் வடிவில் மாற்றிச் சேமித்து வைக்கும் பணியை தமிழ் இணைய கல்விக் கழகம் செய்து வருகிறது. தமிழர்கள் 30க்கும் மேலான நாடுகளில் அதிகமாகவும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கின்றனர். அவர்களுக்கு தமிழை சொல்லித் தரவே இந்த பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.
திமுக என்ன செய்யவில்லை
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ் வளர்ச்சித்துறைக்கும் ரூ.82 கோடி ஒதுக்கி பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், சமீபத்தில் தமிழகம் வந்த அகில இந்தியத் தலைவர் ஒருவர், தமிழுக்கு திமுக என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழுக்கு திமுக என்ன செய்யவில்லை என்பதுதான் அவருக்கு நமது பதிலாக இருக்க முடியும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.