தமிழ்நாட்டுக்கே பெருமை.. இனி செஸ் எங்கேயோ போகும்.. விஸ்வநாதன் ஆனந்த்தை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்டு 9-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.
இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகள் கிடைத்தன. தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நெஞ்சில் மிதித்தார் ஓபிஎஸ்.. இன்னும் 46 அமாவாசை கூட நீடிக்காது.. பன்னீர், ஸ்டாலினை விளாசிய எடப்பாடி!
செஸ் ஒலிம்பியாட்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தமிழக அரசால் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 8ஆம் தேதியுடன் செஸ் ஒலிம்பியாட் தொடர் முடிவடைகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
ஃபிடே தேர்தல்
செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் நடந்துவரும் நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) தலைவர், துணை தலைவர் தேர்தல் சென்னையில் நடந்தது. சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவராக மீண்டும் அர்காடி வோர்கோவிச் மீண்டும் தேர்வாகியுள்ளார். கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஃபிடே துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புகழ்வாய்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டுக்கே பெருமையான தருணம். கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மையும், பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
அர்காடி வோர்கோவிச்
உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்காடி வோர்கோவிச்சுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதில் அவருடைய பங்கு இன்றியமையாதது. தலைவராக அவருடைய முதல் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்ததை போல இரண்டாவது பதவிகாலமும் அமையும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.