குற்ற உணர்ச்சியோ, கூச்சமோ இல்லாத எடப்பாடி பழனிசாமி.. இப்தார் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, குற்ற உணர்ச்சியோ, கூச்சமோ இல்லாமல் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமிய விழாக்களில் கலந்து கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக போராடும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், இஸ்லாமிய மக்களின் அரசியல் உரிமையை காக்கும் வகையில் காவல் அரணாக திமுக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் திமுக சிறுபான்மை பிரிவு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அண்ணா மற்றும் கருணாநிதி இருவருக்கும் இடையில் பாலமாக அமைந்ததே இஸ்லாமிய சமுதாயம்தான்.

அண்ணா - கருணாநிதி
ஏனென்றால் திருவாரூரில் நடந்த மிலாது நபி விழாவில்தான் அண்ணா, கருணாநிதி இருவரும் முதல்முறையாக சந்தித்து கொண்டனர். அதேபோல் ஆட்சிக்கு வந்தபின் திமுக மிலாது நபிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை அதிமுக ஆட்சிக்கு வந்த பின் ரத்து செய்தது. அதேபோல் உருது அகாடமி, காயிதே மில்லத் மணிமண்டபம், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடு அளித்தவர் கருணாநிதிதான்.
கல்வி உதவித்தொகை
இஸ்லாமியர்களுக்கான ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 11,364 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதேபோல் சிறுபான்மையினருக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை பாஜக அரசு நிறுத்திவிட்டது. அதனால் மாநில அரசு தரப்பில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கப்பட்டு வருகிறது.
மனரீதியிலான வன்முறை
அதேபோல் மற்ற மாநிலங்களில் வருந்தத்தக்க சூழல் இருந்தாலும், தமிழ்நாட்டில் மத ரீதியிலான வன்முறை ஏற்படாமல் காத்து வரக்கூடிய அரசு திமுக அரசு இருந்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அதற்கு எதிராக மக்கள் இயக்கம் நடத்தினோம். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து அதிமுக வாக்களித்தது. அந்த சட்டத்தை எதிர்த்து அதிமுக மாநிலங்களவை வாக்களித்திருந்தால், அந்த சட்டமே வந்திருக்காது.
எடப்பாடி பழனிசாமி ஆதரவு
இதனை சிறுபான்மை மக்கள் மன்னிக்கப் போவதில்லை. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி எந்த கூச்சமும் இல்லாமல் இஸ்லாமிய விழாக்களில் கலந்து கொள்கிறார். கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் விழாக்களில் பங்கேற்கிறார். வக்பு வாரிய திருத்த மசோதா தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. சிறுபான்மை மக்களின் உரிமையை பறிக்கும் நோக்கில் பாஜக அதனை கொண்டு வரப் பார்க்கிறது. அதனை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போராடுகிறோம்.
வக்பு வாரிய மசோதா
அது சட்டமானால், அதனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அறிவித்துள்ளோம். பாஜகவின் திட்டங்கள் நிறைவேற திமுக அனுமதிக்காது. உங்களுக்கு எப்போதும் துணையாக நாங்கள் இருப்போம். சிறுபான்மை மக்களுக்கான சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக அரசின் மூலமாக திட்டங்களை நிறைவேற்றுவோம். அதேபோல் இஸ்லாமிய மக்களின் அரசியல் உரிமையை நிலைநிறுத்தி அவர்களுக்கு காவல் அரணாக திமுக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications