முதல்வர் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: மேத்யூ சாமுவேல் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க கோரி செய்தியாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க கோரி தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முதல்வர் தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு குறித்து செப்டம்பர் 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மேத்யூ சாமுவேலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இது குறித்து தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவருடன் தனிப்பட விரோதம் கிடையாது எனவும் தெரிவித்தார்.
கொடநாடு விவகாரத்தில், தமது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், கொடநாடு விவகாரத்தில், தம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவதூறு பரப்புவதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள முதல்வர் தரப்பு, தம்மை பற்றி அவதூறு பரப்ப தடை விதிக்கவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு கோரிய வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் 2019 ஜூன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, முதல்வர் தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க போதிய முகாந்திரம் இல்லை என கூறி மேத்யூ சாமுவேல் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், முதல்வர் தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு குறித்து செப்டம்பர் 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மாத்யூ சாமுவேலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications