விவாத நிகழ்ச்சியில் ஆணித்தரமான வாதம்... பெங்களூரு புகழேந்திக்கு முதல்வர் பாராட்டு
சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளராக பெங்களூரு புகழேந்தி நியமிக்கப்பட்டு ஒரு மாதமே ஆகும் நிலையில் அவருக்கு முதல்வரிடம் இருந்து பாராட்டு கிடைத்துள்ளது.
காரணம் ரேபிட் டெஸ்ட் கிட் விவகாரம், கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு செயல்படும் விதம் குறித்து கடந்த வாரம் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பேசும் போது ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்தது தானாம். கோவை செல்வராஜ், கோகுல இந்திரா, கோவை சத்யன் போன்றோர் அதிமுக சார்பில் ஊடக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் அவர்கள் போல்டாக பேசவில்லை என்பது முதல்வர் தரப்பில் குறையாக பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் தான் பெங்களூரு புகழேந்தியை களமிறக்கினால் என்ன என்ற யோசனை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா ரணகளத்திற்கு இடையேயும் அவரை அதிமுகவின் செய்தித்தொடர்பாளராக நியமனம் செய்து கட்சித் தலைமையில் இருந்து அறிவிப்பு வந்தது. இதனால் உற்சாகமான பெங்களூரு புகழேந்தி தனக்கே உரிய கனீர் குரலில் அரசு தரப்பு முன்னெடுத்து வரும் முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் சமூக வலைதளங்களிலும் விவாத நிகழ்ச்சிகளிலும் ஓங்கி உரைத்து வருகிறார்.
இது தொடர்பான கிளிப்பிங்ஸ் முதர்வர் தரப்பிற்கும் சென்றதாம். இதனால் அவரிடம் இருந்து பெங்களூரு புகழேந்திக்கு பாராட்டும், வாழ்த்தும் கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக சார்பில் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள், என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என அலைபேசி மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறதாம்.
கொரோனா பதற்றம் தணிந்த பின்னர் அரசு இந்த பேரிடரை கையாண்ட விதம் பற்றி மக்கள் மத்தியில் பாசிட்டிவான முறையில் கருத்துக்களை கொண்டுசேர்க்க இப்போதே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.