வரலாற்றின் குரல்! சரோஜ் நாராயண்சுவாமி மறைவு வேதனை அளிக்கிறது! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: மூத்த செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமியின் மறைவு தனக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் பதிவின் விவரம் வருமாறு;
''அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது திருமதி சரோஜ் நாராயண்சுவாமி அவர்களின் குரல்!
மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன்.
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.'' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
'' சரோஜ் நாராயணசாமியின் மரணச் செய்தி வருத்தமளிக்கிறது. அதிகாலையில் அவரது குரலை வானொலியில் கேட்ட நாட்கள் நினைவுக்கு வருகிறது. தமிழ் செய்தி வாசிப்பவர்களின் வரலாற்றில் அவருக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.'' இவ்வாறு தமிமுன் அன்சாரி தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
ஆகாசவாணி.. காலத்தால் மறக்க முடியாதவர் சரோஜ் நாராயணசுவாமி.. ஜவாஹிருல்லா ஆழ்ந்த இரங்கல்!
இதேபோல் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் பலரும் சரோஜ் நாராயண்சுவாமி மறைவு வேதனை அளிப்பதாகவும் தங்களது சிறுவயது நினைவுகளை பகிர்ந்தும் பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.