நாம் இருவர் நமக்கு இருவரோ -ஒருவரோ போதும்! மணமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அறிவுரை!
சென்னை: நாம் இருவர் நமக்கு இருவரோ -ஒருவரோ போதும் என மணமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
குடும்பக் கட்டுப்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி பிரச்சாரம் நடத்திக் கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
சென்னையில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதல்வர் ஸ்டாலின், அந்த விழாவில் இது தொடர்பாக பேசிய விவரம் வருமாறு;

அதிக குடமுழுக்கு
''தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சி காலத்தில் திருக்கோயில்களுக்கு அதிக குடமுழுக்கு செய்யப்பட்டது என்றால் தலைவர் கலைஞருடைய ஆட்சி காலத்தில்தான் அதிகம் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது. ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய பெருமை நம்முடைய முதல்வராக இருந்த கலைஞருக்குத்தான் உண்டு. பூசாரிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது கழக ஆட்சி காலத்தில்தான்.''

வாக்களிக்கத் தவறியவர்கள்
''இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்த்து, வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும், வாக்களிக்காதவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு வாக்களிக்க தவறிவிட்டோம் என்ற வருத்தப்படக்கூடிய அளவிற்கு நம்முடைய ஆட்சி செயல்படும் என்று நான் அப்போதே நம்பிக்கையை தெரிவித்தேன். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றக்கூடிய வகையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றி வருகிறோம்.''

குடும்பக் கட்டுப்பாடு
''இங்கே மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் எல்லாம் நலமும் வளமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும், மணமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உங்கள் குழந்தைகள் ஒன்றோ, இரண்டோ நிறுத்திக்கொள்ள வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டுக்காக மத்திய அரசு, மாநில அரசு எவ்வளவோ செலவு செய்து நிதியை ஒதுக்கி பிரச்சாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.''

நாம் இருவர் நமக்கு இருவர்
''முன்பெல்லாம், நாம் இருவர், நமக்கு மூவர் என்று சொன்னோம். அது படிப்படியாக குறைந்து நாம் இருவர், நமக்கு இருவர். இப்பொழுது நாம் இருவர், நமக்கு ஒருவர், நாளைக்கு இதுவும் மாறலாம், நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர். நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை. இப்படி எல்லாம் பிரச்சாரம் இருக்கிறது. இதையெல்லாம், சீர்தூக்கிப் பார்த்து, நாட்டினுடைய நன்மை கருதி, குடும்ப சூழ்நிலையை கருதி, நீங்கள் உங்கள் செல்வங்களைப் பெற்று அதற்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்று அன்போடு நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications