2030ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்! இலக்கு நிர்ணயித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற "நாளையை நோக்கி இன்றே - தலை நிமிர்ந்த தமிழ்நாடு" எனும் தொழில் வளர்ச்சி மாநாட்டில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு;
உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு.. அடுத்தது என்ன?.. முதல்வர் ஸ்டாலின் பரபர ஆலோசனை
1 டிரில்லியன் அமெரிக்க டாலர்
2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும். இதை அடைய தமிழகத் தொழில் துறை தொய்வில்லாமல் பணியாற்றி வருகிறது என்பதை நானும் அறிவேன், நீங்களும் நன்கு அறிவீர்கள். அதன் ஒரு பகுதியாகத்தான், இன்றைய நாள் மேம்பட்ட உற்பத்திக்கான இரு திறன்மிகு மையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
தொழில் வளர்ச்சி
நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேற்றுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான், இந்த திறன்மிகு மையங்கள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. நான்காம் தலைமுறை தொழில்வளர்ச்சி (Industry 4.0) தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும், இந்த மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையங்கள் வெகுவாக உதவும்.
திறன்மிகு மையம்
டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 251 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைந்துள்ள இந்தத் திறன்மிகு மையம், நாட்டிலேயே இத்தகு முதல் திறன்மிகு மையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் திறன்மிகு மையங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
1 லட்சம் நபர்களுக்கு
கடந்த 12 மாதங்களில், துறைசார்ந்த பல கொள்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இன்று தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022-ஐ வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 10 ஆண்டு காலகட்டத்திற்குள், 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் என்ற இலக்கை நாங்கள் இதன் மூலம் நிர்ணயித்திருக்கிறோம்.
கைகோர்த்து உழைப்போம்
தமிழகத்தின் அனைத்து தொழில் வாய்ப்புகளையும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். தேசிய அளவில் மட்டுமின்றி, தெற்காசியாவிலேயே, தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற இலட்சிய இலக்கினை அடைவதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து உழைப்போம்.