காந்தி,நேரு வாரிசுகள் பேசினால்..கோட்சே வாரிசுகளுக்கு கசக்கத்தானே செய்யும்! விளாசிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை : காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுகள் நேருவின் பேச்சைப் போலவே இருக்கிறது. கோட்சேவின் வாரிசுகளுக்கு மகாத்மா காந்தியின் நேருவின் வாரிசுகளின் பேச்சுகளை பார்த்தால் கசக்கத்தான் செய்யும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளுமான கோபண்ணா 'மாமனிதர் நேரு' என்ற நூலினை எழுதியுள்ளார் அதன் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சர்மான ப.சிதம்பரம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

முதல்வர் ஸ்டாலின்
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,"இந்தியா தன்னுடைய அடையாளமாகக் கொண்டிருந்ததும் இந்தியா தன்னுடைய அடையாளமாக கொள்ள வேண்டியதும் ஜவஹர்லால் நேரு அவர்களைத்தான். எனது அரசியல் வாரிசு நேரு தான் என்று மகாத்மா காந்தி அவர்கள் சொன்னார்கள். காந்தியை உலகமே வியக்கிறது. அத்தகைய காந்தியடிகள் வியக்கும் மனிதராக இருந்தவர். 'நேரு நேரு பளிங்கு போல் தூய்மையானவர் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் உண்மையானவர் அச்சமோ அதிருப்தியோ இல்லாத மாவீரர் ராணுவ வீரனின் துடிப்பு உண்டு தேர்ந்த அரசியல்வாதியின் நிதானமும் உண்டு துணிவில் நேருவை மிஞ்ச ஆளில்லை அவருடைய கரங்களில் தேசம் பாதுகாப்பாக இருக்கிறது' என்று காந்தியடிகள் சொன்னதாக புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு
இதனால் தான் இன்று வரை நேரு அவர்களின் புகழ் நிலைத்து நிற்கிறது. காங்கிரஸ் கட்சியின் குரலை மட்டுமல்ல இந்தியாவின் குரலை எதிரொலித்தவர் நேரு. அவர்கள் இந்தியா முழுமைக்குமான மனிதராக இந்தியா முழுமைக்குமான பிரதமராக நடந்து கொண்டார். ஒரே மொழி -ஒரே மதம் -ஒரே இனம்- ஒரே கலாச்சாரம்- ஒரே பண்பாடு -ஒற்றைத் தன்மை- ஒற்றை சட்டம் ஆகிய அனைத்துக்கும் எதிராக இருந்தவர் தான் நேரு. அவர்கள் மதத்தை சமையலறையில் அடைத்து விடாதீர்கள் எதை சாப்பிடலாம் சாப்பிடக்கூடாது யாரை தொடலாம் யாரை தொடக்கூடாது என்றெல்லாம் சொல்லி மலினப்படுத்தி விடாதீர்கள் என்று சொன்னவர் நேரு.

சாதனைகள்
அவர்கள் வகுப்பு வாதம் தேசியவாதமும் சேர்ந்து இருக்க முடியாது என்று சொன்னவர். அதனால் தான் அவர் மதச்சார்பற்ற சக்திகளால் நேரு போற்றப்படுகிறார். தமிழகத்தின் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவது இந்தி திணிப்பு ஆகும். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்படாது என்ற வாக்குறுதியை வழங்கியவர் பிரதமர் நேரு அவர்கள். தனது வாழ்நாளில் 11 முறை மட்டுமே தமிழகம் வந்த நேரு அவர்கள் தமிழகத்திற்கு மகத்தான பல சாதனைகளை செய்து கொடுத்தார். நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல், சென்னை ஐஐடி ஆகியவை நேருவின் பெயர் சொல்லும் அடையாளங்களாக தமிழகத்தில் விளங்கிக் கொண்டிருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை
ஆனால் தற்போது 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வரைக்கும் வரவில்லை என்பது ஒப்பிட்டால்தான் அன்றைய பிரதமர் நேருவின் பெருமையை நாம் உணர முடியும். இன்று எல்லா குறுக்கு வழிகளிலும் இந்தி நுழைவதை பார்க்கும் போது தான் நேருவின் பெருமை உயர்கிறது. ஒற்றை மதவாதம் தலை தூக்கும் போதுதான் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நேருவின் பெருமை உயர்கிறது. தமிழ்நாட்டுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் தேவைப்படுவதை போல இந்தியாவுக்கு காந்தியடிகளும் மாமனிதர் நேருவும் தேவைப்படுகிறார்கள்.

ராகுல்காந்தி
அந்த வகையில் தான் ஒற்றுமை நடைபயணத்தை நம்முடைய அருமை சகோதரர் ராகுல் காந்தி நடத்தி வருகிறார்கள். ராகுல் காந்தி அவர்கள் பேச்சு இந்தியாவில் பூகம்பத்தை இன்றைக்கு உருவாக்கி இருக்கிறது. அவர் தேர்தல் அரசியலை கட்சி அரசியலை பேசவில்லை. கொள்கை அரசியலை பேசுகிறார். அதனால் தான் இன்றைக்கு ஒரு சிலரால் கடுமையாக அவர் எதிர்க்கப்படுகிறார். அவரது பேச்சுக்கள் பல நேரங்களில் ஜவஹர்லால் நேரு பேசுவதைப் போல இருக்கிறது. நேருவின் வாரிசு அப்படி பேசாமல் இருந்தால் தான் ஆச்சரியம். கோட்சேக்களின் வாரிசுகளுக்கு மகாத்மா காந்தியின் நேருவின் வாரிசுகளின் பேச்சுகளை பார்த்தால் கசக்கத்தான் செய்யும். ஆனால் காலம் மகாத்மா காந்தியை நேருவை நினைவில் வைத்து இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications