தமிழக அரசியல் வரலாற்றில் விஜய் புதிய தந்திரம்.. எடப்பாடிக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசியதன் பின்னணி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் சொன்னது போல்.. அதிமுகவின் வரலாற்றில் மட்டுமல்ல... தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத ஒன்றை முதல்வர் விஜய் செய்திருக்கிறார்.. அதுதான் அதிமுக இரண்டாக உடைந்தபோது, ஒரு தரப்பை ஆதரிக்கும் வண்ணம் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகத்தை அவர்களுடைய இல்லத்திற்கே நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார் விஜய். இது அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இப்படி செய்ததை எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல திமுக தலைவர் ஸ்டாலினே கண்டித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் மேஜிக்' இன்று அரங்கேறியுள்ளது. ஒரு கட்சி பிளவுபடும்போது, அதன் ஒரு தரப்பை மட்டும் புதிய முதல்வர் நேரில் சென்று சந்தித்து ஆதரவு கோருவது என்பது அண்ணாவோ, கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ அல்லது ஜெயலலிதாவோ செய்யாத ஒன்று. அதை நேற்று விஜய் செய்து காட்டினார்.அதனை தொடர்ந்து வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் 25 பேர் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எடப்பாடி ஆவேசம்
இதுபற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மிகுந்த ஆவேசத்துடனும் மனவேதனையுடனும் சட்டசபை வளாகத்தில் பேசுகையில், "கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளிக்க உள்ளோம். அதிமுகவுக்கு சில எம்.எல்.ஏ.க்கள் துரோகம் செய்துள்ளனர். கொறடா உத்தரவை மீறி சட்டத்திற்கு புறம்பாக தவெக அரசுக்கு வாக்களித்துள்ளனர்.
ஆறு அமைச்சர்கள்
6 அமைச்சர்கள் மற்றும் 10 வாரியத் தலைவர்கள் பதவி கொடுப்பதாக தவெக பேரம் பேசியுள்ளது. அதனால் அவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஜெயலலிதா புகழ் சொல்லி தான், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றோம். அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாமல் துரோகம் விளைவிக்கிறார்கள் சில முன்னாள் அமைச்சர்கள்.
என்ன நியாயம்
தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொல்லும் முதல் அமைச்சர் விஜய், ஒரு கட்சியில் கருத்து வேறுபாடும் நிலவும்போது ஒரு தரப்பினரை சந்திப்பது எந்த விதத்தில் நியாயம்?. இதுதான் தூய்மையா?. எல்லா இயக்கங்களுக்குட சோதனைவரும், பிரிவு வரும். ஆனால், எந்த தலைவரும் பிரிந்தவர்களின் இல்லங்களுக்கு சென்றது இல்லை. ஆரம்பத்திலேயே தவறான பாதைக்கு செல்கிறா தவெக விஜய். இது தவறான முன்னுதாரணம்.
திமுகவை தாக்கி பேசினேன்
108 இடங்களில் மட்டும் தான் தவெக வென்றது. விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததால் எண்ணிக்கை 107 ஆனது. ஒரு எம்.எல்.ஏ. வாக்களிக்க முடியாததால் எண்ணிக்கை 106 ஆனது; விஜய் தேர்தலின்போது சொன்ன நடைமுறைகளை இப்போது பின்பற்றவில்லை. நானாக தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை. பிரசாரத்தில் நான் திமுகவை தான் தாக்கி பேசினேன்.
திமுக உடன் பேச்சு நடத்தவில்லை
அதிமுக உருவானதே திமுகவை எதிர்த்து தான். தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்ற ஆசையில் நிர்வாகிகளிடம் தவறான தகவலை சொல்கின்றனர்; நூற்றுக்கு நூறு சதவீதம் திமுகவுடன் எந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பெரும்பான்மை சிறுபான்மை என்பது இப்போது முக்கிய இல்லை. யார் பொதுச்செயலாளர் என்பது தான் இங்கு முக்கியம். கட்சியின் அதிகாரம் என்னிடம் தான் உள்ளது. கொறடாவை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு தான் உள்ளது. பேரவையில் விதி, மரபு பின்பற்றப்படவில்லை" என்றார்.
கருத்து வேறுபாடு
முன்னதாக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, "அதிமுக பொறுத்த வரை, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களை முன்னிறுத்தியே வாக்குகளைச் சேகரித்தோம். அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வருகிறேன். எல்லா கட்சிகளைப் போல எங்கள் கட்சியிலும் கருத்து வேறுபாடு உண்டு.
முதல்வர் விஜய் செய்தது தவறு
அப்படியிருக்கையில், முதலமைச்சர் ஒரு தரப்பிற்கு ஆதரவளிப்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடாது. தேமுதிக கூறியதுபோல குதிரைப் பேரம் வழிவகுத்திருக்கிறது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். 47 பேர் இரட்டை இலை சின்னத்தில் இருந்து வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர்.
தமிழ்நாடு இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அதிமுக இட்ட அடித்தளம் மிக முக்கியமானது.எங்களுடைய அதிமுகவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 47 சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை விரும்பியே மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை குறிப்பிடுகிறேன்.
தூய்மையான ஆட்சியா
எனக்கு கிடைத்த தகவல் படி, ஒரு சில ஆசைவார்த்தைகள் கூறி, அமைச்சர் பதவி தருகிறேன்... வாரிய தலைவர் பதவி தருகிறேன் என்று கூறியதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையா... பொய்யா என்று சொல்கிறேன். நீங்கள் தூய்மையான ஆட்சி தருவேன் என்று கூறியிருக்கிறீர்கள். அதை அப்படியே செய்வீர்கள் என்று நம்புகிறேன். எதிரி கட்சியாக அல்லாமல்... எதிர்க்கட்சியாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறுகிறேன்." என்றார்.
விஜய் செய்தது புதியது
முன்னதாக எடப்பாடி பழனிசாமி சொன்னது போல், 25 எம்.எல்.ஏ-க்களுடன் எஸ்.பி. வேலுமணியும், சி.வி. சண்முகமும் தனியாகச் செயல்படத் தொடங்கிய நிலையில், புதிய முதல்வர் விஜய் யாரிடமும் சொல்லாமல் நேராக அவர்களின் இல்லத்திற்கே சென்றது தமிழ்நாட்டு அரசியலில் புதியது தான்.
பொதுவாக ஒரு முதல்வர், தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சியின் ஆதரவைக் கோரும்போது, முறையான கடிதம் அனுப்புவது அல்லது போனில் பேசுவதுதான் வழக்கம். ஆனால், விஜய் நேரடியாகச் சென்று வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தைச் சந்தித்தது, எடப்பாடி பழனிசாமியின் தலைமையைத் தான் துளிகூட மதிக்கவில்லை என்பதைக் காட்டியுள்ளது. இதன் எதிரொலியாகவே, இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் வேலுமணி தரப்பின் 25 எம்.எல்.ஏ-க்களும் விஜய்க்கு ஆதரவாகப் பொத்தானை அழுத்தியிருக்கிறார்கள்.
விஜய்யின் இந்த நகர்வால் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன?
அதிமுக-வின் அங்கீகாரம் பெற்ற தலைமையைப் புறக்கணித்துவிட்டு, அதிருப்தி தரப்பை விஜய் கௌரவித்தது, எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தியுள்ளது. கட்சியின் எஞ்சியிருக்கும் எம்.எல்.ஏ-க்களும் 'பவர்' இருக்கும் பக்கம் சாய இது ஒரு தூண்டுதலாக அமைந்துவிடும். வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில், பிளவுபட்ட அதிமுக-வின் ஒரு பகுதியையும் தவெக-வையும் இணைத்து ஒரு புதிய 'மெகா கூட்டணி' அமைப்பதற்கான வெள்ளோட்டமே இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.
விஜய்யின் இந்தச் செயல் பலருக்கு 'ராஜதந்திரமாகத்' தெரிந்தாலும், எடப்பாடி தரப்பிற்கு இது 'முதுகில் குத்தும்' செயலாகவே படுகிறது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகையுமில்லை என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. ஆனால், ஒரு முதல்வர் எதிர்க்கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையைத் தவிர்த்துவிட்டு, அதிருப்தியாளர்களைத் தேடிச் சென்றது, தமிழக அரசியலில் 'புதிய கலாச்சாரம்' தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.
ஸ்டாலின் கண்டிப்பு
இதனை திமுக தலைவர் ஸ்டாலினும் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள் பதிவில் கூறுகையில். "தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது" என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்! ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? கிளீன் பாலிட்டிக்ஸ்s-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, டர்டி பாலிட்டிக்ஸ் பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க."உங்களோட தொடங்கமே இப்படி இருந்தா பினிசிங் எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களைத் தூக்குற சக்தியா?" எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் (விஜய்) அவர்களே,உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க. எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!" இவ்வாறு கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications