எல்லோருக்கும் பொதுவான முதல்வர்.. தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டாரா? சட்டசபையில் அனல் பறந்த வாதம்
சென்னை : ரமலான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விசுவநாதன் கேள்வி எழுப்பிய நிலையில் திமுக ஆன்மிகத்துக்கு எதிரான கட்சி என சித்தரிக்கும் நிகழ்வு நடைபெறுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் இன்று இந்து சமய அறநிலையத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதிலளித்து பேசினார். மேலும் சில முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினும் பதிலளித்தார்.

சட்டமன்றத்தில் விவாதம்
குறிப்பாக தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்கும் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதில் ஆதினத்தை பல்லக்கில் சுமப்பது மரியாதை குறைவு கிடையாது எனவும், தருமபுரம் ஆதினத்தை பல்லக்கை சுமக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இதுகுறித்து தமிழக முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

தீபாவளி வாழ்த்து
தொடர்ந்து நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளரும் நத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், தமிழக முதல்வர் அனைவருக்கும் பொதுவானவர், மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர். ரம்ஜான் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட மற்ற எல்லா மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் போது, தீபாவளிக்கு மட்டும் ஏன் தமிழக முதல்வர் வாழ்த்து சொல்வது இல்லை என கேள்வி எழுப்பினார்.

திமுக எதிர்ப்பு
நத்தம் விஸ்வநாதனின் இந்தக் கருத்துக்கு திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சபாநாயகர் அப்பாவு அமைதியாக இருக்கும்படி கூறிய நிலையில் நத்தம் விஸ்வநாதனுக்கு ஆதரவாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் பேசியதில் எந்த தவறும் இல்லை எனவும் அவர் அவர்களுக்கு எதிராகப் பேசவில்லை. முதல்வர் பொதுவானவர் அனைத்து மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர் என்பதால் எல்லா பண்டிகைகும் வாழ்த்து கூறும் முதல்வர் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து கூற வில்லை என்ன தான் கேள்வி எழுப்பியதாகவும் இதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டார்.

முதல்வர் ஸ்டாலின் பதில்
இதனை தொடர்ந்து பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆன்மிகத்துக்கு எதிரான கட்சி என்று சித்தரிக்கும் நிகழ்வானது தற்போது நடைபெற்று வருவதாகவும், அதை மனதில் வைத்தே எதிர்க் கட்சி உறுப்பினரான நத்தம் விஸ்வநாதன் பேசியிருக்கிறார். இதற்கெல்லாம் நாங்கள் அடி பணிந்து விடமாட்டோம் இது தந்தை பெரியாரின் ஆட்சி பேரறிஞர் அண்ணா உருவாக்கிய ஆட்சி தலைவர் கலைஞர் வழிநடத்தி வரும் ஆட்சி திராவிட ஆட்சி எங்கள் கூட்டணிக்கு மதச்சார்பற்ற கூட்டணி என்று தான் பெயர் வைத்து தேர்தலை சந்தித்தது அதில் சந்தேகம் வேண்டாம் என கூறினார்.












Click it and Unblock the Notifications