தொண்டை வலியால் அவதிப்படும் முதலமைச்சர் ஸ்டாலின்! மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் குறையாத வலி!
சென்னை: கடந்த ஒரு வாரமாக மருந்து மாத்திரைகள் உட்கொண்டும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்னும் தொண்டை வலி முழுமையாக சரியாகவில்லை.
தனக்கு காய்ச்சல் மட்டுமே குறைந்திருப்பதாகவும் தொண்டை வலி இன்னும் குணமாகவில்லை எனவும் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினே மெல்லிய குரலில் பேசியிருக்கிறார். கடந்த சனிக்கிழமை அன்று காய்ச்சலும், தொண்டை வலியும் இருந்ததால் பிரபல காது மூக்கு தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர் மோகன் காமேஸ்வரனிடம் சிகிச்சைக்கு சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வைரஸ் ப்ளூ காய்ச்சலும், தொண்டை இன்ஃபெக்ஷனும் கண்டறியப்பட்டு அதற்குரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதேபோல் ஒரு வார காலமாவது ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அடுத்த நாளே சென்னை மண்டல திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் காணொலி மூலம் கலந்துகொண்டு கடும் தொண்டை வலிக்கு மத்தியிலும் பேசச் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதிகம் பேசக் கூடாது என டாக்டர்கள் அட்வைஸ் அளித்தும் அதனை மீறி கட்சித் தொண்டர்களுக்காக தன் சிரமம் பார்க்காமல் சில நிமிடங்கள் பேசினார். அதேபோல் வீட்டில் ஓய்வில் இருப்பினும் உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் போனில் பேசியபடித் தான் இருந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனால் தொடர்ந்து தொண்டைக்கு வேலை கொடுப்பதால் இன்னும் தொண்டை வலி மட்டும் அவருக்கு சரியாகவில்லை. ஆனாலும் அத்துடனே இன்றைய தினம் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழாவில் சிரமம் பார்க்காமல் கலந்துகொண்டதுடன் பேசவும் செய்தார்.
தொண்டை வலி இருந்தாலும், தனது மக்கள் தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காகவே தாம் வந்ததாக பேசியிருக்கிறார். இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தினர் கசாயம் உள்ளிட்ட இயற்கை முறை மருந்துகளையும் தொண்டை வலி குணமாவதற்காக கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இன்னும் சில நாட்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் தரப்பில் அட்வைஸ்கள் அளிக்கப்பட்டாலும் ஓரிரு நாட்களில் அவர் வழக்கம் போல் பரபரப்பு பணிக்கு திரும்பி விடுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications