மீண்டும் வருகிறது சென்னை சங்கமம்! 4 நாட்கள் 16 இடங்களில் கலை விழா! சூறாவளியாக களமிறங்கிய கனிமொழி!
சென்னை: சென்னையில் வரும் ஜனவரி 14ஆம் தேதி சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
நாட்டுப்புற கலை விழாக்களை சென்னை சங்கமம் என்ற பெயரில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் பம்பரமாக சுழன்று வருகிறார் கனிமொழி எம்.பி.
சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் அதற்கான இடம் தேர்வு உள்ளிட்ட பணிகளில் சூறாவளியாக சுற்றி வருகிறார் கனிமொழி.

சென்னை சங்கமம்
கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. கனிமொழி எம்.பி. ஒருங்கிணைப்பில் நடைபெற்று வந்த இந்த விழாவானது அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு புத்துயிர் அளித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதுமட்டுமல்லாமல் சென்னை சங்கமம் கலை விழாவை முன்னின்று ஒருங்கிணைக்கக் கூடிய பொறுப்பையும் கனிமொழி வசம் அவர் ஒப்படைத்திருக்கிறார்.

உற்சாகமாக கனிமொழி
இதனால் மிக உற்சாகமாக இந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கனிமொழி எம்.பி. நேரடியாக களத்திற்கு சென்று சென்னை சங்கமம் நடத்தப்படுவதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார். செம்மொழிப் பூங்கா, மெரினா கடற்கரை, மே தின பூங்கா, ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, கொளத்தூர் விளையாட்டு திடல் என சென்னையில் 16 இடங்களில் ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் சென்னை சங்கமம் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாட்டுப்புற கலைஞர்கள் அழைத்து வரப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கரகாட்டம்
சென்னை சங்கமம் கலை விழாவுக்கு சென்னை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இது போன்ற விழாக்கள் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அங்கீகாரமாகவும் அவர்களுக்கான வாய்ப்பாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சங்கமம் விழாவில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், குயிலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட இன்னும் பல நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மாலை நேரங்களில்
சென்னை சங்கமம் கலை விழாவை பொறுத்தவரை பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் தினமும் மாலை வேளையில் மட்டுமே நடத்தப்படுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை என 3 மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கு டிக்கெட் கட்டணம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications