விஜய்க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புதிய புகார்.. மக்களிடம் மன்னிப்பு கேட்கனும்..TNCRW வலியுறுத்தல்
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் (TNCRW) கண்டனம் தெரிவித்துள்ளது. 2026 தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை விஜய் பயன்படுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது, வீட்டில் இருக்கும் குட்டி நண்பா நண்பீஸ்.. விஜய் மாமாவுக்கு ஓட்டு போட சொல்லி பெற்றோரையும் ஓட்டு போடும் வயசில் இருக்கும் அண்ணா, அக்கா, சித்தி, சித்தப்பா எல்லோரையும் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லுங்க என்று பேசினார்.

விஜய் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்
விஜய்யின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. விஜய் தனது அரசியலுக்காக குழந்தைகளை பயன்படுத்துவதா? என தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் விஜய்க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் குழந்தைகள் நல கண்காணிப்பகம் புகாரளித்துள்ளது. தமிழ்நாடு குழந்தைகள் கண்காணிப்பகத்தின் அமைப்பை சேர்ந்த தேவநேயன் இது தொடர்பாக கூறியதாவது:-
தேர்தலில் குழந்தைகளை எல்லாம் அரசியல் கட்சிகளும் பயன்படுத்தியுள்ளன. அது கண்டனத்திற்குரியது. ஆனால் மிக கொடூரமாக குழந்தைகளை பயன்படுத்தியது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்தான். அவரது செயல் கண்டனத்திற்குரியது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முற்றிலும் மீறுவதாக உள்ளது. இளம் சிறார் சட்டத்தின் படி இது வன்முறையான விஷயம்.
குழந்தைகள் தாங்குவார்களா?
குழந்தைகளின் சிறந்த நலனுக்கு எதிரானது. குழந்தைகளை உளவியல் ரீதியாக சித்ரவதை செய்வது. குழந்தைகளை இன்புளுயன்ஸ் செய்கிறார்கள். அப்பா அம்மாக்களை தூண்டுங்க என்றால்.. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அது அறியா பருவம். விடலை பருவம்.. எது சரி, எது தவறு என்று தெரியாது. குழந்தைகளை பகடைக்காய்களாக ஆக்கி நீங்கள் வீட்டில் போய் ஓட்டு போடுங்க என சொல்ல சொல்வது எவ்வளவு பெரிய வன்முறையை தூண்டும்.
குழந்தைகளின் உளவியலை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நாளைக்கு ஏதாவது நெகட்டிவ் நடந்தால் குழந்தைகள் தாங்குவார்களா? சமூக அக்கறை இல்லாமல், குழந்தைகள் மீது அக்கறை இல்லாமல் விஜய் செய்வது வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இது மிக மிக கண்டிக்கத்தக்கது. இதனால், தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளோம்.
விஜய் பொறுப்பு ஏற்பாரா?
மாநில குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையத்திடமும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடமும் புகாரளித்துள்ளோம். சிக்கல் என்னவென்றால், தேர்தல் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை குழந்தைகள் தாங்குவார்களா? கண்டிப்பாக இது உளவியல் சிக்கலை ஏற்படுத்தும். குழந்தைகள் தவறான முடிவை எடுத்தால் யார் பொறுப்பு? அந்த கட்சி தலைவர் பொறுப்பா? தவெக பொறுப்பு ஏற்குமா? பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணியுங்கள்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications