சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் மெத்தனம்.. காவல்துறைக்கு விஜயகாந்த் கண்டனம்
சென்னை: சின்னசேலம் நகரிலுள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த, கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கை உரிய விசாரணை நடத்தாமல் மெத்தனமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன்.
மாணவி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் அவர் எப்படி இறந்தார் என்பதை தமிழக அரசு உடனடியாக கண்டறிய வேண்டும். மேலும் மாணவியின் சாவிற்கு காரணமான பள்ளி நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அந்த தனியார் பள்ளியை இழுத்து மூட வேண்டும். இந்த மாணவி போலவே ஏற்கனவே 5-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
எனவே, மாணவி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு உரிய நீதி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications