234 தொகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் விஜய்க்கு துணையாக இருப்போம்.. தவெக கிறிஸ்துமஸ் விழாவில் பிஷப் பேச்சு
சென்னை: இன்று சென்னையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய பிஷப், 234 தொகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் விஜய்க்கு துணையாக இருப்போம் என்று கூறினார். மேலும், விஜய் நிச்சயம் தமிழகத்தை ஆளப்போகிறார். நீங்கள் எதையும் சம்பாதிக்க இங்கு வரவில்லை. சம்பாதித்ததை கொடுத்து மக்களுக்காக வந்து இருக்கிறீர்கள். 2026 ஆம் ஆண்டு முதல்வராக தமிழகத்தை ஆள்வீர்கள். அது நிச்சயமாக நடக்கும் என்றும் அவர் கூறினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை அடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அந்தந்த கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
இதேபோல் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா இன்று கொண்டாடப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை த.வெ.க.வினர் தவிர்த்தனர். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் விழாவை விமரிசையாக கொண்டாட அவர்கள் திட்டமிட்டனர். அதன்படி மாமல்லபுரம் அருகேயுள்ள போர்பாயிண்ட் ஹோட்டலில் த.வெ.க. சார்பில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தினத்தூது ராஜா பேச்சு
இந்த விழாவில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்பதற்காக த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெண்கள் 1,500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக அவர்களுக்கு க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெண்கள் இன்று காலையிலேயே விழா நடைபெறும் போர்பாயிண்ட் ஹோட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.
அரங்கத்தின் நுழைவு வாயிலில் பாதுகாவலர்கள் அவர்களின் அனுமதி சீட்டை சரிபார்த்து உள்ளே அனுப்பினார்கள். விழாவில் பேராயர்கள், ஆயர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் இந்தியன் கிறிஸ்டியன் மெடிசஸ் கவுன்சில் (ICMC) தலைவர் ரமேஷ்குமார் என்ற தினத்தூது ராஜா இந்த விழாவில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
234 தொகுதிகளிலும்
விஜய் நிச்சயம் தமிழகத்தை ஆளப்போகிறார். நீங்கள் எதையும் சம்பாதிக்க இங்கு வரவில்லை. சம்பாதித்ததை கொடுத்து மக்களுக்காக வந்து இருக்கிறீர்கள். எங்கள் இந்திய கிறிஸ்தவ ஊழியர்கள் ஐக்கியத்தின் சார்பாகவும் உங்களை வாழ்த்துகிறோம். ஆசிர்வதிக்கிறோம். இது எங்கள் விழா..
புரட்சித் தளபதி கொண்டாடுகிற எங்கள் விழா. சமத்துவ கிறிஸ்துமஸ் விழா.. நாங்கள் அரசியல் பேச இங்கு வரவில்லை. இங்கு தோளுக்கு தோளாய் நிற்க இங்கே வந்துள்ளோம். நாங்கள் கிறிஸ்தவர்கள் 234 தொகுதிகளிலும் இந்திய கிறிஸ்தவ ஊழியர் ஐக்கியம் என்ற இயக்கம் நடத்தி வருகிறோம். நாங்கள் உங்களுக்கு தோளுக்கு தோளாய் நிற்போம்.
எங்கள் கோரிக்கைகளை விஜய் நிறைவேற்றுவார்
எல்லா நேரங்களிலும் நிற்கும் படியாக நாங்கள் வந்து இருக்கிறோம். சிறுபான்மை மக்களுக்காக கடந்த பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிற திராவிட ஆட்சிகளுக்காக எங்களின் நிறைய கோரிக்கைகள் இருந்தது. அவற்றில் சில முக்கியமான கோரிக்கைகள் கூட நாங்கள் போராடி போராடி பெற முடியாமல் சோர்ந்து போய் வந்து இருக்கிறோம். எங்களின் ஒரு சில கோரிக்கைகள் அன்புத் தளபதி விஜய் நிறைவேற்றுவார். 2026 ஆம் ஆண்டு முதல்வராக தமிழகத்தை ஆள்வீர்கள். அது நிச்சயமாக நடக்கும். என்று பேசினார்.
கிறிஸ்தவர்களின் வாக்குகள் யாருக்கு?
த.வெ.க. நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில், ஆயர்கள் விஜய்க்கு ஆதரவாக பேசிய நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஸ்டர்கள், தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும் என்று பேசியிருந்தது கவனித்தக்கது. வரும் சட்டமன்ற தேர்தலில் கிறிஸ்தவர்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்பது அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications