உலகமெங்கும் உற்சாகப் பெருக்கு... இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் நன்னாள்
சென்னை: கருணையின் உருவமாக திகழ்ந்த இயேசு பிரான் அவதரித்த நாளான கிறிஸ்துமஸை உலகமெங்கும் வாழும் கிறிஸ்துவ பெருமக்கள் உணர்வுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தன் வாழ்நாள் முழுவதும் அன்பையும், கருணையையும் மட்டுமே போதித்த இயேசு பிரான் மனிதகுலத்தின் மாண்பைக் காக்கும் வகையில் பல நல்ல போதனைகளை வழங்கியுள்ளார்.
இறைமகன் பிறப்பை டிசம்பர் மாதம் முழுவதும் கொண்டாடும் கிறிஸ்துவ சமுதாய மக்கள் வீடுகளில் நட்சத்திரங்களை கட்டி தங்கள் அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
2,000 ஆண்டுகள்
பாலஸ்தீனம் நாட்டில் உள்ள பெத்லஹேம் என்ற இடத்தில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் இயேசு. அவரை உலகைக் காக்க வந்த மீட்பராகவும், ரட்சகராகவும் போற்றி வணங்கி அவரது போதனைகளை ஏற்று மக்கள் அவர் வழிநடந்தனர்.
பரந்தமனம்
தயாள குணம் கொண்ட இயேசு தனக்கு துன்புறுத்தல் செய்தவர்களை கூட மன்னிக்கும் விசால இதயம் படைத்தவராக திகழ்ந்தார். எதிரிகளை கூட மன்னித்து அவர்களிடம் நேசம் காட்ட வேண்டும் என்ற நற்பண்புமிக்க அறிவுரைகளை கூறி மானுடத்தை பேணி நடந்தார்.
மகிழ்ச்சியின் மாதம்
டிசம்பர் மாதத்தை உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்துவ பெருமக்கள் மகிழ்ச்சியின் மாதமாக கொண்டாடி வருகின்றனர். வீடுகளில், அலுவலகங்களில் கிறிஸ்துமஸ் மரங்களையும், இயேசு பிறந்த மாட்டுத்தொழுவம் போன்ற குடில்களையும் அமைத்து, இறைமகனை நினைவுகூறுகின்றனர்.
சிறப்பு பிரார்த்தனை
உலகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மேலும், கிறிஸ்துமஸ் அன்று புத்தாடைகள் அணிந்து, இனிப்புகளை மாற்று மதத்தினருக்கு பரிமாறி அன்பையும், சகோதரத்துவத்தையும் கிறிஸ்துவ மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.
பொறுமை
மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு, அமைதி, ஆகிய நற்பண்புகளை பின்பற்றி வேற்றுமையில் ஒற்றுமை காக்க வேண்டும் என்பதே இந்த நன்னாளின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.