சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு எதிர்ப்பு- அதிகாலையிலேயே சிஐடியூ போராட்டம் பரபரத்த பல்லவன் இல்லம்!
தனியார் பேருந்துகளின் இயக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியுவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்
சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு சார்பில் அதிகாலையிலேயே போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்துகள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண பேருந்து, டீலக்ஸ் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து என மூன்று வகையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர்த்து பெண்களுக்கு என சிறப்பு பேருந்து, நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் செல்வதற்கு சிறிய ரக பேருந்துகளையும் மாநகராட்சி சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக 625 வழித்தடங்களில் சுமார் 3,436 அரசு பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் ஏறத்தாழ 30 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னையில் தனியார் பேருந்து சேவையை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு முதற்கட்டமாக 500 பேருந்துகள் Gross Cost Contract முறையில் சென்னையில் இயக்கப்படும். எதிர்வரும் 2025ம் ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 500 கூடுதலாக்கப்படும். இந்த தனியார் பேருந்துகளானது தற்போது மாநகர பேருந்துகள் இயங்கும் வழித்தடங்களில் இயக்கப்படும்.
இந்த பேருந்துகளுக்கு இவ்வளவு கட்டணம் என்ற மாநகர போக்குவரத்துக் கழகம் நிர்ணயம் செய்யும். நிர்ணயித்த தொகையில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு வரம்பாக வைக்கப்படும். இந்த குறிப்பிட்ட வரம்பை கடந்து வசூல் ஆனால் அந்த தொகையானது மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட வேண்டும். குறைவாக வசூல் ஆனால் அதனை மாநகர போக்குவரத்து கழகம் ஈடுகட்டும். இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு 'சிஐடியு' கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதேபோல இன்று போக்குவரத்து பணிமனைகள் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை 6 மணியளவில் சென்னை பல்லவன் இல்லத்தின் வெளியே சிஐடியு சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டத்தில் போக்குவரத்து துறை தனியார் மயமாக்காதே என்று முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர். இவ்வாறு தனியார் பேருந்துகள் இயக்கப்படுமானால் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட வழித்தடங்களில் அரசு பேருந்துகளே இயக்கப்படாமல் போகும் அபாயம் ஏற்படலாம் எனவும் சிஐடியு அமைப்பினர் அச்சம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசானது பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது மாநில அரசே இது போன்று தனியார்மயப்பாதையை ஊக்குவிக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிஐடியு மட்டுமல்லாது தொமுச மற்றும் அதிமுகவின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தினரும் நாளை போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். அடுத்தடுத்த நாட்களில் இந்த போராட்டம் தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications