180 கி.மீ. தூரத்தில் டிட்வா! சென்னையில் வெயில்! உன்னை புயலுன்னு இந்த உலகம் இன்னுமாடா நம்புது?
சென்னை: டிட்வா புயல் சென்னையை நெருங்கி வருவதாக சொல்லப்படும் நிலையில் தற்போது வெயில் காய்ந்து வருகிறது. ஒரு பக்கம் மேகக் கூட்டங்கள் எல்லாம் நகர்ந்து செல்கிறது. நேற்று இரவு முதலே மழை படிப்படியாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் காலையில் வானிலையை பார்த்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத நிலையில் தற்போது வெயில் காய்வது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிட்வா புயல் சென்னையை நோக்கி புயலாகவே வந்து கொண்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் அது நடுக்கடலிலேயே வறண்ட காற்று காரணமாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது. இதனால் அதன் நகர்வில் தாமதம் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் இந்த டிட்வா புயல் காலையிலேயே தமிழக கடற்கரைக்கு வரும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் வரும் என சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருக்கும் டிட்வா புயலானது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் தமிழகம்- புதுவை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கடலூருக்கு தென்கிழக்கே 100 கிமீ. தொலைவிலும் காரைக்காலுக்கு வடகிழக்கில் 100 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும் வேதாரண்யத்திற்கு வடகிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் 180 கி.மீ. தூரத்திலும் டிட்வா புயல் உள்ளது.

அதன் மைய பகுதி வட தமிழகம்- புதுவை கடற்கரையில் இருந்து குறைந்தபட்சம் 70 கி.மீ தூரத்தில் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம்- புதுவை கடலோர பகுதிகளுக்கு இணையான பகுதியில் வடக்கு நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு நோக்கி வரும் பட்சத்தில் இந்த புயலானது வங்கக் கடலில் தென்கிழக்கே தமிழகத்தில் இருந்து 60 கி. மீ. தொலைவிலும் புதுவையில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் இன்று மாலை அல்லது மாலை மையம் கொள்ளும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு இன்று அதிகனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. நாளைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் புலி வருது புலி வருது என்கிற கதையாக மழையே காணவில்லை. அதிலும் சென்னை முகப்பேரில் வெயில் அடித்த காட்சியை பார்க்கும் போது, ஒரு புயல் சென்னைக்கு 180 கிமீ. தூரத்தில் இருக்கும் போது இப்படி வெயில் அடிப்பது, அதை அசிங்கப்படுத்துவது போல் இல்லையா என்ற கேள்விதான் எழுகிறது.












Click it and Unblock the Notifications