கொடநாடு திரில்லரும்.. சீரியல் கில்லரும்.. எடப்பாடிக்கு நெருக்கமான “அரக்கன்”? -அதிரவைத்த அழகுராஜ்
சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து கைது செய்யுமாறு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக உட்கட்சிப்பூசல் பூதாகரமாகி இருக்கும் நிலையில், சமீபத்தில் நமது அம்மாவின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார் மருது அழகுராஜ். இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை குறித்து அவர் நீண்ட பதிவை எழுதியுள்ளார்.
அதில், "கொடநாடு திரில்லரும்.. சீரியல் கில்லரும்.. கூவத்தூர் தேர்வு நடந்து கோட்டையில் ஆட்சியில் அமர்ந்து மாதம் சில கடக்க, மகராசி அம்மா குடியிருந்த கோவிலாம் கோடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை நடந்தது.

கொடநாடு செல்லாத தலைகள்
அதில் ஓம்பகதூர் என்கிற நேபாளத்து காவலாளி கொலையாகிக் கிடக்க கிருஷ்ண பகதூர் என்னும் நேபாளி குத்துயிரோடு தப்பித்திருக்க... ஒரு குதிரை பொம்மை இரு கடிகாரங்கள் மட்டும் களவு போனதாக கதையொன்று பிறக்க... சட்டைப்பையில் அம்மா படம் வைத்து சதா இதய தெய்வம் என்று சரணகோஷம் பாடும் முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை கொலை நடந்த கொடநாட்டிற்கு பதறி ஓடவில்லை அவர்களிடம் பதைபதைப்பு ஏதுமில்லை.

ஐயங்கள் பிறந்தன
இந்த சதுரங்க வேட்டையின் ஏற்பாட்டு நாயகன் என்பதாக சந்தேகிக்கப் படுபவரான சஞ்சீவனுக்கு அடுத்த சில நாட்களில் மாநில வர்த்தக அணி செயலாளர் எனும் மகுடம் சூட்டப்படவே... ஐயங்கள் பிறந்தன... ஆங்காங்கே மௌனமாய் அலசல்கள் எழுந்தன. தப்பிப்போன கிருஷ்ண பகதூரை நேபாளம் சென்று அழைத்து வந்தாலே நடந்தது என்ன என்பதெல்லாம் நாட்டுக்கு தெரிந்துவிடும் என்ற நிலையில் அது நடக்காமல் போனது.

மர்ம மரங்கள்
ஆனால் அடுத்த சில நாளில் கொலை கொள்ளைகள் தொடர்பு என சந்தேகத்துக்கு உள்ளான அம்மாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே மர்மமான விபத்து ஒன்றில் கொல்லப்பட்டார். அதே நாளில் கேரளாவிற்கு தப்பிப்போன இன்னொரு குற்றவாளியும் மர்மமான விபத்தில் சிக்க அவரது மனைவியும் மகனும் மரணித்து விட, அடுத்த சில நாளில் கொடநாடு பங்களாவில் பணி செய்த தினேஷ் என்பவரும் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்ள... ஒரு குதிரை பொம்மை இரண்டு கடிகாரம் இதற்காக ஐந்து உயிர்கள் பரலோக பயணங்களா..? என்று பற்றியது நெருப்பு.

கொரோனாவின் தயவு
ஆனாலும் அம்மா அம்மா என வார்த்தைக்கு வார்த்தை அல்லேலூயா பாடும் அமைச்சர் முதல் முதலமைச்சர் வரை கொடநாடு கொலை குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. கூடவே வழக்கை விரைந்து முடித்து உண்மையை ஆழக்குழி தோண்டி புதைக்க காவல்துறை துணையோடு கட்டளைகள் பறப்பதை உணரமுடிந்தது. ஆனால்... கொரோனா தயவில் கொடநாடு கொலைவழக்கு வேகம் குறைந்தது... விரைந்து முடித்துவிட வேண்டும் என்பவரது வெறித்தனத்தில் இடியும் விழுந்தது. பிறகென்ன தேர்தல் முடிந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது. வாக்குறுதி தந்தது போலவே கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் புதுவேகம் பிறந்தது. புதைக்க முற்பட்ட உண்மை கள் பலவும் புற்றீசலாய் பிறந்தது.

எடப்பாடிக்கு நெருக்கம்
குற்றத்தின் சூத்திரதாரியை கொலை கொள்ளை நடத்திய கொடும் பாதகனை நெருங்கும் நேரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று பரபரப்பு செய்தி ஒன்றை அம்பலத்தில் கொண்டு வந்து அதிர்ச்சி தந்திருக்கிறது. அது கொடநாடு கொலை வழக்கு தொடர்புடைய குற்றவாளிகளை சந்தித்து பேரம் பேசிய பிரதான நிகழ்வை பின்தொடர்ந்தது விசாரித்ததில் அந்த குற்றவாளிகள் கைகாட்டுவது இளங்கோவன் என்கிற அஇஅதிமுக அதிமுக்கிய பிரமுகரை என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி. அதுசரி... இவருக்கு தானே எடப்பாடி பன்னெடுங்காலமாகலன்வபம் வைத்திருந்த சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை சமீபத்தில் தரைப்பாடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

முதலமைச்சரிடம் கோரிக்கை
சரி சரி இப்ப முடிவுக்கு வரலாம். மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே பதினெட்டு வருடத்தில் ஒருவரிகூட உங்களை நான் பாராட்டி எழுதியதில்லை. தயவுகூர்ந்து கண்முன்னே நிழலாடும் களவாணியை ஒரு முன்னாள் முதல்வர் வீட்டைக் கொள்ளையடித்து காவலாளி தொடங்கி கார் ஓட்டுநர் வரை ஐந்து உயிர்களை பலி பீடம் ஏற்றிய அந்த அரக்கனை சீக்கிரமாய் பிடித்து சிறையில் அடையுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகும். புரட்சித் தலைவியை உயிராக நேசிக்கின்ற தொண்டர்களின் போற்றுதலும் உங்களை வந்து சேரும் அன்போடு வேண்டும்... கழகத் தொண்டன்..." என்று பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications