ரூமில் என்ன நடந்தது.. "அந்த" 10 நிமிஷம்.. பிரதமரை முதல்வர் மட்டும் தனியாக சந்தித்து பேசியது ஏன்..?
எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமருடனான சந்திப்பு ஏன் தனியாக நடந்தது என்று தெரியவில்லை
சென்னை: எந்நாளும் இல்லாத திருநாளாக நேற்று நடந்த சம்பவம்தான் இப்போது வரை அரசியல் களத்தில் அனலை கிளப்பி கொண்டிருக்கிறது.. பிரதமர் மோடியை முதல்வர் மட்டும் தனிமையில் சந்தித்து பேசியிருக்கிறார்.. ஓபிஎஸ் இல்லாமல்..!
இந்த 4 வருட காலத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே அதிருப்திகள் வந்து போய் கொண்டிருக்கின்றன என்றாலும் கடந்த சில மாதங்களாகவே அவை உச்சத்தில் உள்ளன..
ஓபிஎஸ் இப்போது வரை என்ன நினைத்து கொண்டிருக்கிறார்? எதை மனதில் வைத்து, காய் நகர்த்தி வருகிறார்? ஏன் அமைதியாகவே இருக்கிறார்? சசிகலா விஷயத்திலும் வாய் திறக்காதது ஏன்? என்ற கேள்விகள் எழுந்தபடியே உள்ளன.
மூன்று முகம்
யாரும் யாருக்கும் கொத்தடிமை இல்லை என்று ஒரு பக்கம் சொல்கிறார்.. மகன் ஒரு பக்கம் சசிகலாவுக்கு வாழ்த்து சொல்கிறார்.. இன்னொரு பக்கம் பாஜகவுக்கு நெருக்கத்தை காண்பித்து வருகிறார்.. ஒரே சமயத்தில் "மூன்று முகம் " பிரதிபலிப்பதையும் காண முடிகிறது.
சந்திப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான் பிரதமர் நேற்றைய தினம் வந்திருந்தார்.. டெல்லியில் இருந்து மோடி வந்தாலும் சரி, அமித்ஷா வந்தாலும் முதல்வரும் ,துணை முதல்வரும் சேர்ந்துதான் அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள். இந்த முறையும் இவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.. சென்ற வாரமே அதாவது சசிகலா வந்த அடுத்த நாளே, ஓபிஎஸ் - இபிஎஸ் 2 பேரும் டெல்லிக்கு கிளம்பி செல்ல போவதாகவும் ஒரு செய்தி கிளம்பியது.. அதனால் முக்கிய ஆலோசனைகளை முதல்வர், துணை முதல்வர் பிரதமரிடம் நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஓபிஎஸ்
ஆனால், நேற்று முதல்வர் மட்டும் பிரதமரை தனியாக சந்தித்து பேசி உள்ளார்.. ஓபிஎஸ்ஸும் இதில் கலந்து கொள்வதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.. நேரு உள்விளையாட்டரங்கில் பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட தனி ரூமில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் அவர் தனியாக சந்தித்து பேசியிருக்கிறார்... எதற்காக தனியாக சென்று பேசினார்? என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.
3 விஷயங்கள்
அநேகமாக 3 விஷயங்களை முதல்வர் பிரதமரிடம் விளக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.. ஒன்று, தமிழக அரசியல் குறித்த ஒருசில நிகழ்வுகளை பிரதமர் மோடியிடம் முதல்வர் சொல்லி இருக்கலாம்.. அடுத்து, அதிமுக - பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை பற்றி ஆலோசித்திருக்கலாம்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும், தனியாகவே இந்த தேர்தலை எதிர்கொள்ளலாம் என்றும் கோரிக்கையாக பிரதமரிடம் முதல்வர் முன்வைத்திருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
சசிகலா
அமமுகவை சேர்க்காமலே, அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும்... சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் அதிமுகவில் மறுபடியும் சேர்ப்பதை கட்சியினரும் விரும்பவில்லை, தமிழக மக்களும் விரும்பவில்லை... தொண்டர்களும் இதில் உறுதியாக உள்ளனர் என்று பிரதமரிடம் முதல்வர் எடுத்து சொன்னதாக தெரிகிறது.
ஓபிஎஸ்
ஒருவேளை அதிமுக கூட்டணி தொடர்பாக ஆலோசித்திருந்தால், கட்சிக்கு தலைவரே ஓபிஎஸ்தான்.. அவர் இல்லாமல் ஏன் சந்தித்தார்கள் என்பதும் கேள்விக்குறிதான். அல்லது ஓபிஎஸ் வைத்து கொண்டு சசிகலா விஷயத்தை வலியுறுத்துவதில் ஏதாவது சிக்கல் இருக்கும் என்பதால்தான் தனியாக இந்த சந்திப்பு நடந்தது என்ற சந்தேகமும் வருகிறது. ஆனால், இந்த சந்திப்புக்கு பிறகு முதல்வர் செம தெம்பாகி ஆகிவிட்டாராம்.
அமித்ஷா
ஓபிஎஸ் அமித்ஷாவுக்கு நெருக்கம் என்றால், எடப்பாடியார் பிரதமருக்கு நெருக்கம் என்பது போல இவர்களின் செயல்பாடுகள் அத்தனையும் அமைந்து வந்தாலும், சசிகலா விஷயத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்களை தனித்தனியாக பாஜக டீல் செய்து வருகிறதா என்ற யூகமும் எழுந்துள்ளது... ஆக மொத்தம், தனியாக பிரதமரை முதல்வர் சந்தித்த அந்த 10 நிமிஷத்தில் ஏதோ ஒரு முக்கியத்துவம் பொதிந்துள்ளதாகவே அரசியல் பிரமுகர்கள் கணக்கு போடுகிறார்கள்.