20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை சந்திக்க அதிமுக ரெடி.. அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு
சென்னை: 20 தொகுதிகளுக்கு அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோர் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதே காலை 9 மணிக்கு மேல் தான் உறுதி செய்யப்பட்டது. எனவே திட்டமிடப்படாத திடீர் ஆலோசனை கூட்டம் இது, என்று கூறப்படுகிறது.
கூட்டத்தில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவை செல்லும் என்று ஹைகோர்ட் 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கியதையடுத்து காலியாகும் தொகுதிகள், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் ஏற்கனவே எம்எல்ஏக்கள் மறைவால் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆண்டிப்பட்டி தொகுதி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்எல்ஏ ஜக்கையன், அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி. பார்த்திபன், தேனி மாவட்ட கழக செயலாளர் சையது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பெரிய குளம்
பெரியகுளம் தனி தொகுதிக்கும், ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். எம்எல்ஏ முருகுமாறன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சுப்புரத்தினம், சையது, பார்த்திபன் ஆகியோர் இக்குழுவில் அடங்கியுள்ளனர். பெரம்பூர் தொகுதிக்கு, கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொன்னையன் தலைமை
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில், கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே..பிமுனுசாமி தலைமையில் அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் தொகுதிக்கு, கழகத் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரூர் தனி தொகுதிக்கு கழக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு தம்பிதுரை எம்பி தலைமையில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை தொகுதிக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை தொகுதிக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி
குடியாத்தம் தனி தொகுதிக்கு, அமைச்சர் தங்கமணி தலைமையிலும், விளாத்திகுளம் தொகுதிக்கு அமைச்சர் வேலுமணி தலைமையிலும், திருப்போரூர் தொகுதிக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும், சாத்தூர் தொகுதிக்கு கழக அமைப்புச் செயலாளர் தளவாய்சுந்தரம் தலைமையிலும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அமைச்சர் உதயகுமார் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் அடங்கிய குழுவும், பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு கழக செயலாளர் அன்பழகன் தலைமையிலும், சோளிங்கர் தொகுதிக்கு அமைச்சர் சம்பத் தலைமையிலும், திருவாரூர் தொகுதிக்கு அமைச்சர் காமராஜ் தலைமையிலும், பரமக்குடி தனி தொகுதிக்கு, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையிலும், ஓட்டப்பிடாரம் தனித்தொகுதிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையிலும், பூந்தமல்லி தனி தொகுதிக்கு அமைச்சர் பெஞ்சமின் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிமுக ஆர்வம்
நீரடித்து நீர் விலகாது, என்று சமீபத்தில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர். தினகரன் தரப்புக்கு தாவிய அதிமுக நிர்வாகிகளை திரும்ப அழைக்கும் நோக்கத்தில், இவ்வாறு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில், கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும், தினகரன் அணி பலவீனப்படுத்துவது தொடர்பாகவும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதித்ததாக தெரகிறது. 20 தொகுதிகளிலும் அதிமுக தேர்தலை சந்திக்க ரெடியாகிவிட்டது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.











Click it and Unblock the Notifications