ஜெட் வேக திமுக.. சட்டசபை தேர்தல் வியூகம்.. தொகுதி பார்வையாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை: 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக திமுகவின் தொகுதி பொறுப்பாளர்களுடன் அக்கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 234 தொகுதிகளின் நிலவரங்கள், தேர்தலை எதிர்கொள்ளும் வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக திமுக முழுவீச்சில் களமிறங்கி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை திமுக அறிவித்தது. 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல்- நீக்கல் உள்ளிட்ட பணிகளை இந்த பார்வையாளர்கள் மேற்கொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பல்வேறு தொகுதிகளில் பாகமுகவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று திமுகவின் 234 தொகுதி பார்வையாளர்களுடன் அக்கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதிகளின் களநிலவரம், பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்டவைகளின் நிலவரங்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கள் குறித்தும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முன்னதாக கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட 'என் உயிரினும் மேலான' மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'என் உயிரினும் மேலான' இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது, நான் அளவில்லாத வகையில் பெருமை அடைந்திருக்கிறேன்! இந்தப் பேச்சு போட்டி, மூன்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற போட்டி மட்டும் அல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தியலை, அடுத்த நூற்றாண்டுக்குத் தூக்கிச் சுமந்து
செல்லவிருக்கும் பேச்சுப் போராளிகளைக் கண்டறிந்து, பட்டை தீட்டும் பயிற்சிப் பட்டறை! அப்படிப்பட்ட பட்டறையை, நான் கட்டியெழுப்பிய இளைஞரணி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான், என் பெருமைக்குக் காரணம் என்றார்.













Click it and Unblock the Notifications