அன்றாடம் கூலி வேலை செய்வோர் மகிழ்ச்சி.. இதுதான் முக்கியம்.. கவனத்தை பெற்ற ஸ்டாலினின் அறிவிப்புகள்!
சென்னை: தமிழகத்தில் ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கை நீடித்த முதல்வர், இந்த முறை அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்.
மளிகை கடை, சாலையோர காய்கறி, பழக் கடைகள், காய்கறி கடைகள், வாகன பழுது நீக்கும் கடைகள், இறைச்சி கடைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், மின்பொருட்கள் கடைகள், ஹார்டுவேர் கடைகள் செயல்பட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் வீட்டு வேலை செய்பவர்கள், எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணிணி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள், தச்சர்கள் உள்ளிட்ட சுயதொழில் செய்பவர்கள் வேலை செய்வதற்கு அனுமதி அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டாலின் முழு முயற்சி.. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு விரைந்த பாரத் பயோடெக் அதிகாரிகள்.. ஆய்வு
நம்பிக்கை பிறந்தது
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த இரண்டு வாரங்களாக வேகமாக குறைந்து வருகிறது. 36 ஆயிரத்தில் இருந்து 24 ஆயிரமாக குறைந்துள்ளது. இன்னமும் குறையும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது. தளர்வுகளற்ற ஊரடங்கிற்கு பிறகே தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.
மளிகை காய்கறி கடை
இந்நிலையில் அன்றாடம் கூலி வேலைசெய்யும் மக்கள், சுயதொழில் செய்யும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகளை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம் என்றும், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 50% பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழம்,பூ விற்பனை நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சர், ஸ்டேசனரி கடைகள்
மீன் சந்தைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கறிக்கடைகளும் (மொத்த சந்தைக்கு) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. - இருசக்கர வாகனம், சைக்கிள் பழுது பார்க்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம் - ஸ்டேசனரி விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
எலக்ட்ரீசன் பிளம்பர்
கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களில் (கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை11 மாவட்டம் தவிர) வீட்டு வேலை செய்பவர்கள், எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணிணி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள், தச்சர்கள், வாகன பழுது நீக்குபவர்கள் உள்ளிட்ட சுயதொழில் செய்பவர்கள் காலை 6மணி முதல் மாலை 5 மணி வரை இபதிவுடன் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பில், அன்றாடம் கூலி வேலை செய்வோர், சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவோர் நிம்மதி அடைந்துள்ளனர்.
பிறந்தது வழி
ஒரு பக்கம் நிதி நெருக்கடி, மறுபக்கம் கொரோனா பாதிப்பு என இரண்டு சிக்கலில் சிக்கி தவித்த மக்கள் வரும் திங்கள் முதல் வேலைக்கு போய் வருமானம் ஈட்டும் வழி பிறந்திருக்கிறது. இந்த சூழலில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து அரசின் அறிவுறுத்தல்களை சுயகட்டுப்பாட்டுடன் கடைபிடித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து மிள முடியும். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படாதவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம் ஆகும்