செம மாஸ்.. "தெற்கு வளர்கிறது.. வடக்கிற்கும் வாரி வழங்குகிறது" - சட்டப்பேரவையில் ஸ்டாலின் ஒரே போடு
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை மீதான விவாதத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் வடக்கிற்கும் தெற்கு வாரி வழங்குவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஆற்றிய உரையில், "திராவிட மாடல் வழித்தடத்தில் நாம் இயங்கிக் கொண்டிருப்பதால்தான், தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை; தடுக்கவும் முடியாது! "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது." ஒரு காலத்தில் 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என்று நாமே முழங்கினோம். இன்று, "தெற்கு வளர்கிறது; வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது" என்ற இத்தகைய தகுதியும் பெருமையும் தமிழ்நாட்டிற்கு எதனால் சாத்தியமானது? திராவிட இயக்கத்தால்தான்.

ஆட்சி என்பது வெறும் அதிகாரம் அல்ல; கொள்கையைச் செயல்படுத்தும் 'களம்' என்று மாற்றிக் காட்டியவர்கள்தான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும்! 'இன்னார்க்கு மட்டுமே இன்னது' என்பதை மாற்றி 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கருத்தியலை அரசியல் களத்தில் விதைத்தார் தந்தை பெரியார்! அதனை ஆட்சி நிர்வாகத்தில் செயல்படுத்தியவர்கள் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும். அதே கோட்பாட்டை இன்றைய நவீன காலச் சிந்தனைகளுடன் இணைத்து, 'திராவிட மாடல்' ஆட்சியை உங்கள் அனைவரது பேராதரவுடன் நான் நடத்தி வருகிறேன்.
நான் என்றால், தனிப்பட்ட நான் அல்ல; அப்படி எப்போதும் நான் கருதியது இல்லை. "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று நான் பொறுப்பேற்கும்போது, அந்தச் சொல்லை உச்சரித்த அடியேன் நான் தான். உச்சரிக்க வைத்தவர்கள், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் உள்ளடக்கிய தமிழ்நாட்டு மக்கள். அந்தத் தமிழ்நாட்டு மக்களுக்காகவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் சிந்தித்துச் செயல்பட்டு வருகிறேன். என் மனச்சாட்சிப்படி நான் செயல்பட்டு வருகிறேன். எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாண உறுதிமொழிக்கு உண்மையாக நான் ஆட்சி செய்து வருகிறேன்.
இன்னும் சொன்னால், தந்தை பெரியாரின் வாரிசாக, பேரறிஞர் அண்ணாவின் வாரிசாக இருப்பவர் எப்படிச் செயல்பட வேண்டுமோ, அப்படிச் செயல்பட்டு வருகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் இன்று இருந்து, ஆட்சி செய்திருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி நான் ஆட்சி நடத்தி வருகிறேன். இதுதான் கலைஞருக்கும் பெருமை; அவர் மகனான இந்த ஸ்டாலினுக்கும் பெருமை என்பதை உணர்ந்தவன் நான்.
14 வயதில் தமிழ்க் கொடி ஏந்தி, 95 வயது வரையிலும் அதனை உயர்த்திப் பிடித்திருந்த தமிழினத் தலைவர் கலைஞருக்கு இது நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆண்டு. இந்த ஆண்டில், அவரது உயிரினும் மேலான இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருக்கிறது என்பதுதான் எனக்குக் கிடைத்த பெருமை.
பெருமைமிகு கலைஞரின் நூற்றாண்டில், வியப்புமிகு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிற சிறப்புமிகு தகுதியால், மகிழ்ச்சிமிகு மனநிலையில் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நின்றுகொண்டு இருக்கிறேன். இத்தகைய நெகிழ்ச்சிமிகு ஆண்டின் தொடக்கத்தில், கடந்த 12 ஆம் நாளன்று மாண்புமிகு ஆளுநர் உரையுடன் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பேரவை நடவடிக்கைகள் தொடங்கி இருக்க வேண்டும்.
ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்துத் தருவதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், ஆளுநர் அவர்கள் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இம்மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ! என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications