அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாளில் சமத்துவம் நோக்கிய பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்: ஸ்டாலின்
சென்னை: "அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!" என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர், திராவிடர் என்பதை மொழி, கலாச்சாரம் என்பதை தாண்டி அதனை அடையாள சொல்லாக மாற்றியவர் அயோத்திதாச பண்டிதர். 1881ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பூர்வகுல தமிழர்கள் என குறிப்பிட வேண்டும் எனக் கூறியவர் பண்டிதர். 1891ஆம் ஆண்டு திராவிட மகாஜன சபை எனும் இயக்கத்தை ஆரம்பித்தார்.

ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என கூறியவர் அயோத்திதாசர். இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது சாதி, மதம் என உரக்கக் கூறியவர். அவரது 175வது பிறந்தநாள் இன்று.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்டிதர் அயோத்திதாசர் மணி மண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அயோத்திதாசரின் பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பண்டிதர் அயோத்திதாசரின் உருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அயோத்தி தாசரின் உருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இல. சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அரசு உயர் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
இந்நிலையில், அயோத்திதாசர் பிறந்தநாளையொட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், "தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில், அயோத்திதாசப் பண்டிதரின் 175வது ஆண்டு விழாவையொட்டி அவர் நினைவாக 2 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதருக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications