தமிழர்களின் குணாதிசயங்கள் இது.. யாதும் ஊரே யாவரும் கேளிர்.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற்றது. ஜூலை 28ம் தேதி நடத்தப்பட்ட தொடக்க விழா முதல் நிறைவு விழா வரை தமிழக அரசு சிறப்பாக நடத்தியது. சுமார் 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் எவ்வித பிரச்னையும் இல்லாமல், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் மு.க.அழகிரி மகன்! அண்ணன் தம்பி சந்திப்பு எப்போது? களைகட்டும் மதுரை!
தமிழக அரசு
சர்வதேச வீரர்கள் தங்க வைக்கப்பட்ட விடுதிகள் முதல் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகள் வரை ஒவ்வொன்றையும் தமிழக அரசு கவனமாகவும், ஆர்வத்துடன் செய்தது. அவ்வப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் பகுதிகளுக்கு சென்ற அரசியல் தலைவர்களும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
நிறைவு விழா
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழக விளையாட்டு கலாச்சாரத்திலும், பொருளாதார மேம்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்று முன் தினம் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் பதக்கங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தமிழில் ட்வீட் செய்த பிரதமர்
செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்தப் போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களது வார்த்தைகளுக்கு நன்றி. விருந்தோம்பல் மற்றும் சுயமரியாதை ஆகியவை தமிழர்களின் பிரிக்க முடியாத குணாதிசயங்கள். செஸ் ஒலிம்பியாட் போன்று சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். இறுதியாக யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று குறிப்பிட்டுள்ளார்.