பெண்களுக்கு மாதம் ரூ1,000 - பொங்கல் நாளில் துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்?
சென்னை: பெண்களுக்கான மாதம் ரூ1,000 உறுதிப் பணம் திட்டத்தை வரும் பொங்கல் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு
குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது திமுக அரசு. இந்த தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
பொங்கல் பணம்?
கடந்த அதிமுக ஆட்சியில் ரொக்கப்பணம் உள்பட பொங்கல் பரிசு வழங்கியிருக்கும் நிலையில், ரொக்கப் பணம் இல்லாமல் பரிசு தொகுப்பு வழங்குவது ஏழை மக்களிடம் அதிருப்தியை உருவாக்க வாய்ப்பிருப்பதாக முதல்வரிடம் எடுத்துச் சொல்லி இருக்கின்றனராம் அதிகாரிகள்.
பொங்கல் நாளில் தொடக்கம்?
இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரிக்கும் போது, இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உறுதிப் பணம் வழங்குவது குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அந்த திட்டத்தை வருகிற பொங்கல் தினத்தில் துவக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். அதனால் தான் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பணம் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.
மாதம் ரூ2,150 கோடி செலவு?
அதேசமயம், தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் ரேசன் கார்டுகள் இருக்கின்றன. எந்த பாகுபாடுமில்லாமல் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மாதம் வழங்கினால், சுமார் 2,150 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கும். ஒரு மாதம் எனில் பிரச்சனை இல்லை; எதையாவது வைத்து சமாளித்து விடலாம். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும். இருக்கிறது நிதிச்சுமையில் ஒவ்வொரு மாதமும் ரூ2,150 கோடி சாத்தியமில்லை என நிதித்துறை தரப்பில் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாம்.
நகை கடன் பாணியில் கணக்கெடுப்பு
அதனால், 2 கோடியே 15 லட்சம் ரேசன் கார்டுகளில் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள அந்தியோஜனா ரேசன் அட்டைகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் என மிக மிக ஏழ்மையான நிலையில் இருக்கும் பெண்களின் ரேசன் கார்டுகள் மட்டும் எவ்வளவு வருகிறது என கணக்கெடுப்பு நடந்துள்ளது. மொத்தமுள்ள ரேசன் கார்டு எண்ணிக்கையில் சுமார் 80 சதவீத கார்டுகள் கழிக்க முடிவு செய்துள்ளது அரசு. அந்த வகையில் மிக சொற்பமான எண்ணிக்கையில் தான் 1000 ரூபாய் உறுதிப் பணம் பெறுவதற்கான பயனாளிகளை தேர்வு செய்யவிருக்கிறது. இவர்களுக்கு மட்டுமே உறுதிப்பணம் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் பொங்கலுக்கு துவக்கப்படலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். நகைக்கடன் தள்ளுபடிக்காக பயனாளிகள் பட்டியல் தயாரிப்பதற்காக எந்த அணுகுமுறையை கடைப்பிடிக்கப்படதோ அதே பணியை பெண்களுக்கான பணம் திட்டத்திலும் கையாள தீர்மானிக்கப் பட்டிருக்கிறது என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.