சில மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா.. ஊரடங்கு தளர்வு குறைப்பு? முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை
சென்னை: ஊரடங்கு உத்தரவில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின், தலைமைச் செயலாளர் உள்பட உயர் அதிகாரிகளுடன் நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். சில மாவட்டங்களில் கொரோனா பரவலாக அதிகரித்திருக்கும் நிலையில் அங்கு தளர்வுகளை குறைக்கலாமா என்பது பற்றியும் இதில் விவாதிக்கப்பட உள்ளது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 19ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் அதன் பிறகு எடுக்கவேண்டிய முடிவுகள் தொடர்பாக நாளைய, ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இறையன்பு பங்கேற்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு துவங்க உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிப்பார். தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுத் துறை ,வருவாய்த்துறை உள்ளிட்டவற்றின் செயலாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முதல்வருடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

எதெற்கெல்லாம் தடை
பிற மாநிலங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கத்திற்கு தற்போது தடை தொடர்கிறது, திரையரங்குகள் திறப்பதற்கு தடை தொடர்கிறது, பொது இடங்களில் நீச்சல் குளங்களை பயன்படுத்துவதற்கும் தடை தொடர்கிறது, பொது இடங்களில் அரசியல் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்த தடை தொடர்கிறது.

பஸ் போக்குவரத்து
இதில் பிற மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்தை துவங்குவது தொடர்பாக நாளை முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மற்ற தடைகளை இப்போதைக்கு நீக்குவதற்கு அரசு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால் சில மாவட்டங்களில் தற்போது கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. மூன்றாவது அலை எப்போது வருமோ என்ற அச்சம் மக்களிடையே இருக்கிறது.

3வது அலை பற்றி சந்தேகம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குழந்தைகளிடையே கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவது மூன்றாவது அலை தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலும் நோய்த்தொற்று அதிகரித்தபடி இருக்கிறது. எனவே சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை திரும்ப கொண்டு வரலாமா என்பது பற்றி இதில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

சென்னை, கோவைக்கு கூடுதல் கவனம்
குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெரு நகர பகுதிகளில் வார இறுதி நாட்களில் மக்கள் உரிய வகையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிவதாக புகார்கள் வரும் நிலையில், சென்னை, கோவை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றி உறுதியான முடிவுகள் எடுக்கப்படும், அது 19ம் தேதிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications