2018 ஆம் ஆண்டுக்கு பிறகு.. முதல்முறையாக.. கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலினும் அழகிரியும்.. பரபரப்பு
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் 90ஆவது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலினும் மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு இன்று 90-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக கோபாலபுரம் இல்லத்தில் விழா கோலம் பூண்டுள்ளது.
வாசலில் வண்ண வண்ண தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. அங்கு எப்படியும் முதல்வர் வருவார் என்பதால் தொண்டர்கள் கோபாலபுரத்திற்கு திரண்டு வருகிறார்கள். அண்ணா அறிவாலயத்தில் ஒரு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் நேராக கோபாலபுர்திற்கு சென்றார்.

அவரை அங்கிருந்தவர்கள் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அடுத்த 10ஆவது நிமிடத்தில் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி தனது மனைவி காந்திமதியுடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்ததால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. துர்கா ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து புறப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் கேக் வாங்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடந்தன. அனைவரும் தயாளு அம்மாளின் காலில் விழுந்து ஆசிப்பெற்றனர். அது போல் கனிமொழி எம்பி, தயாநிதி மாறன், திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் எல்லாம் கோபாலபுரத்தில் ஐக்கியமாகி உள்ளனர்.
ஒரே நேரத்தில் ஸ்டாலினும் அழகிரியும் கோபாலபுரத்திற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அழகிரி கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு எத்தனையோ முறை திமுகவில் இணைய அழகிரி முயற்சித்தார். ஆனால் அப்போது பொதுச் செயலாளராக இருந்த மறைந்த க.அன்பழகன் உள்ளிட்டோர் தலைவர் (கருணாநிதி) சொன்னது சொன்னதுதான் என கூறி அவரை கட்சியில் சேர்க்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து மு.க.அழகிரி திமுக மீது பல விமர்சனங்களை முன் வைத்தார். தேர்தலில் தோல்வியுறும் என்றெல்லாம் பேசியிருந்தார். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவின் போது மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் ஒன்றாக சந்தித்து கொண்டனர். 2018ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுக்கு பிறகு இப்போதுதான் இருவரும் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போதுகூட அழகிரிக்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர் மகன் துரை அழகிரியையும் மகள் கயல்விழியையும் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை ட்விட்டரில் அழகிரி தெரிவித்திருந்தார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்லும் போதெல்லாம் அழகிரி வீட்டுக்கு போவாரா என எதிர்பார்ப்புகள் எழும். ஆனால் அது நீர்த்து போய்விடும்.
அது போல் உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்ற போது மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைக்க சென்றிருந்த போது பெரியப்பாவை நேரில் சந்தித்தார். அப்போது வாசலில் காத்திருந்து தம்பி மகனை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். இருவரும் ஒன்றாகவே பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இப்படியான சந்திப்புகளுக்கு மத்தியில் இன்று கோபாலத்தில் முதல்வர் ஸ்டாலினும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் நேரில் சந்தித்துக் கொண்டனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications