சோனியா.. மம்தா இருக்க.. சட்டென பேச்சில் வந்து விழுந்த பொன்முடி பெயர்.. புட்டு புட்டு வைத்த ஸ்டாலின்!
சென்னை: நேற்று பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி ரெய்டு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 24 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை கூடுதல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. இன்று நடக்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இது தவிர, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் இந்த மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்பார்கள். நேற்று முதல் கட்டமாக இரவு நேர விருந்து கொடுக்கப்பட்டு விருந்திற்கு இடையே சிறிய அளவிலான ஆலோசனைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
இன்று நடக்கும் கூட்டத்தில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த முறை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முழுக்க முழுக்க கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் இந்த முறை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளார்.
நேற்று விருந்திற்கு இடையே அமைச்சர் பொன்முடி விவகாரம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. பொன்முடி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே ஆகியோர் பேசி உள்ளனர். பல்வேறு முக்கியமான விஷயங்களை கேட்டுள்ளனர்.
இந்த ரெய்டு குறித்தும், அமைச்சர்கள் குறி வைக்கப்படுவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பேசி இருக்கிறார். அதோடு அமைச்சர்கள் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டார்கள். சட்ட ரீதியாக இதை எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க மற்ற மாநிலங்களிலும் இதே போல ரெய்டுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று இவர்களிடம் பேசி உள்ளார்.
பொன்முடி: நேற்று அமைச்சர் பொன்முடி இங்கே அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டார். நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தப்பட்டது.
காலை 7 மணிக்கு தொடங்கிய ரெய்டு இரவு 12 மணி வரை தொடர்ந்தது. இன்னொரு பக்கம் 9 மணி அளவில் ரெய்டுக்கு இடையே பொன்முடி விசாரணை நடத்தப்படுவதற்காக அழைத்து செல்லப்பட்டார். கைது செய்யப்பட்டார் என்று கருதப்பட்ட நிலையில் அவரை விசாரணை செய்வதற்காக என்று மட்டும் அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர்.
இதில் பொன்முடி எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பல்வேறு முக்கிய பண பரிமாற்றங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டது. அவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால் அவர் மீதான விசாரணை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications